பக்கம் : 558
 

     மனத்தினால் நிருமித்திட்டான் - மனத்தினால் நினைத்த மாத்திரையானே படைத்தான், (எ - று.)

வானவில் உமிழ்ந்து மின்ன - இந்திர வில்லைப்போல் பல்வேறு ஒளிகளை வீசி மின்ன
என்க. சடியரசன் விஞ்சையனாகலின் நினைப்பி னாலேயே விமானத்தைத் தோற்றுவித்தான்
என்க. தான் கருதிய வண்ணம் எனினுமாம்.
 

( 20 )

அவ் விமானத்தின் பெருமை
847.

மற்றதன் வடிவு கேட்பின் மரகத மணிக்க றன்மேல்
பெற்றதன் னிலையிற் றாகிப் பெருகிய வளமை தோன்றிச்
சுற்றிய பசும்பொற் சோதி சொரிந்து போய்த் துறக்கங் காண
முற்றிய 1முகடு நீலக் குவட்டிடை முடிந்த தன்றே.
 

      (இ - ள்.) மற்று அதன் வடிவு கேட்பின் - அவ்விமானத்தின் உருவச் சிறப்பை
வினவுமிடத்து, மரகத மணிக்கல் தன் மேல் - மரகதம் என்னும் நீலமணியாலியன்றதொரு
மலையின்மேல், பெற்றதன் நிலையிற்றாகி - தன் இருக்கையைப்பெற்ற நிலைமையை
யுடையதாகி, பெருகிய வளமை தோன்றி - பாரித்த வளம் உடையதாய், பசும்பொற் சோதி
சுற்றிய சொரிந்து - பசும் பொன்னிறமான ஒளியைத் தன்னைச் சூழ வீசி, துறக்கம்
காணப்போய் - தன்னையொத்த விமானம் ஈண்டுளதேயோ எனப் பார்க்கும் பொருட்டுச்
சுவர்க்க நாட்டினளவு உயர்ந்து போய், முற்றிய முகடு - முடிந்ததன் குவடு, நீலக்
குவட்டிடை முடிந்தது - விசும்பின் நீலநிறமான உச்சியிற் சென்று முடிவுற்றது, (எ - று.)

     அவ்விமானம் ஒரு மரகத மலையிடத்தே தன் அடிப்பகுதி உளதாகச் சோதி
சொரிந்துபோய்த் துறக்கங் காணச்சென்று, வானநீல முகட்டிடை முடிவுற்றது, என்க.
 

( 21 )

 
848.

பாரித்த பவழத் திண்காற் பளிங்குபோழ் பலகைதன் மேற்
பூரித்த 2சுடரின் செம்பொற் போதிகைப் புடங்க டோறு
மூரித்தண் 3சுடர்வெண் முத்தின் பரூஉத்திரண் முயங்கி ஞால
வேரித்தண் டுவலை கால மாலைகள் விசித்த வன்றே.
 

     (இது முதல் 9 செய்யுள்கள் விமானத்தின் சிறப்புக்கூறும் ஒரு தொடர்)

     (இ - ள்.) பாரித்த பவழம் திண்கால் - பருத்த பவழத்தாலியன்ற திண்ணிய
கால்களையும், பளிங்குபோழ் பலகைதன் மேல் - பளிங்கு அரிந்து இயற்றிய
பலகைகளின்மேல், பூரித்த சுடரின் செம்பொன் போதிகை - நிறைத்த ஒளியுடைய
பொன்னாலியன்ற குறுந்தறிகளையும் உடையதாய்,


     (பாடம்) 1. முகட்டு நீலக். 2. சுடரச் செம்பொன். 3. சுடரமுத்தின்.