பக்கம் : 568
 
சுயம்பிரபை விமானம் ஏறுதல்
866.

அன்னவகை 1தேவியர்க ளோடமரு மெல்லை
முன்னுமுக வோரையொடு மூர்த்தநல நோக்கி
மன்னுபுல வோர்கள்சொல மன்னன்மக டன்னை
இன்னகை விமானதல மேறுகினி தென்றான்.
 

      (இ - ள்.) அன்னவகை - அவ்வாறு, தேவியர்களோடு அமரும் எல்லை -
சுயம்பிரபை தாயர்களோடு வீற்றிருந்த பொழுது, மன்னுபுல வோர்கள் - சோதிடநூலில்
நிலைபெற்ற அறிவுடையோர்கள், முகவோரை யொடு மூர்த்தநலம் நோக்கி -
முதன்மையுடைய ஓரை (இராசி) முழுத்தம் இவற்றின் நலன்களை ஆராய்ந்தறிந்து, சொல -
சொல்லுதலாலே, மன்னன் - சடி வேந்தன், மகள்தன்னை - தன் மகளாகிய சுயம்பிரபையை,
இன்னகை விமான தலம் ஏறுகினிது என்றான் - இன்புறத்திகழும் எழிலுடைய விமானத்தில்
இனிதே ஏறுக என்று பணித்தான், (எ - று.)

     அவ்வாறு ஒப்பனை செய்யப்பட்டுச் சுயம்பிரபை தாயரோடே வைகிய பொழுது
புலவர்கள் ஓரை முழுத்த முதலிய நாள்நன்மை நோக்கிச் சொல்ல, சடிமன்னன் மகளை,
விமானத்தில் இனிதே ஏறுக என்றான், என்க.
 

( 40 )

 
867.

தொண்டைதொலை வித்ததுவர் வாய்மகளிர் சூழக்
2கண்டுவளர் தாயரொடு 3கஞ்சுகியர் காப்ப
விண்டுவளர் சோதிகொள் விமானமது சேர்வாள்
வண்டுவளர் கற்பமுறை வான்மகளொ டொத்தாள்.
 

     (இ - ள்.) தொண்டை தொலைவித்த துவர்வாய் மகளிர் - கொவ்வைக் கனியைத்
தோற்கச்செய்த பவளவாய் மகளிர் பலர், சூழ - தன்னைச் சூழ்ந்து வரவும், கண்டுவளர்
தாயரொடு - வளர்த்தற்குரிய செயல்களை நன்குகண்டு தன்னைவளர்த்த செவிலித்
தாயாருடனே, கஞ்சுகியர் - மெய்ப்பைபுக்க முதியரும், காப்ப - காவலைச்செய்து போதவும்,
விண்டுவளர் சோதிகொள் - தோன்றிவளர்தலையுடைய ஒளிமிக்க, விமானமது -
விமானத்தை, சேர்வாள் - அடைகின்ற சுயம்பிரபை, வண்டுவளர் கற்பமுறை வான்மகளொடு
ஒத்தாள் - வண்டுகள் இசைவளர்க்கும் கற்பலோகத்தின் கண்ணே வதிகின்றதொரு தெய்வப்
பெண்ணைப்போன்று திகழ்ந்தாள், (எ - று.)

     மகளிர் சூழத் தாயரோடே, கஞ்சுகியர் காப்ப, விமானம் ஏறுகின்றவள், வான்மகளை
ஒத்தாள், என்க.
 

( 41 )


     (பாடம்) 1. தேவிமகளோடமரும். 2. கொண்டு. 3. காஞ்சுகியர்.