பக்கம் : 572
 

     ஒலிக்கும் இயல்புடையவாயையுடைய, பணவங்கள் - முரசுகள், முரன்றன - ஒலித்தன,
முகில் எல்லாம் மகரமால்கடல் வரைமிசை எழுந்து முரன்றன என - மேகங்கள் அனைத்தும்
மகர மீன் திரிகின்ற கடலினின்றும் போந்து மலைகளின் வந்து குழுமி முழங்கலாயின என்று
கூறும்படி, படைமாற்றம் எழுந்தது - நால்வகைப் படைகளின் முழக்கம் எழுந்தது,
நகரவாயிலின் புறம்பணை இரத நூபுர நகரத்தின் மருங்கிலுள்ள நிலங்களெல்லாம், நடுங்கின
- அதிர்ந்து நடுக்கங்கொண்டன, கொடியெல்லாம் நடுங்கின - கொடிக்குழாங்களும் ஆடின,
(எ - று.)

     முகரம் - ஒலி. யானைமணிகள் ஒலித்தன; சங்கொலித்தன; முரசங்கள் முழங்கின;
முகில் முழக்கம்போலே படை முழங்கின; நிலம் அதிர்ந்தது; கொடி ஆடின; என்க. நானில
மாகலின் பன்மையாற் கூறினர்.
 

( 47 )

 

874.

ஒளிறு வாட்படை 1யுளர்ந்தது கிளர்ந்தன
     ருழைக்கல வுழை யோர்கள்
களிறு காத்திர முறுத்தலி னெறித்தலை
     கருமுகி னெரிவுற்ற
குளிறு மின்னியங் குழுமலிற் செழுமலைக்
     கொடுமுடி யுடனார்த்த
வெளிறில் கேள்வியான் பெரும்படை விசும்பிடை
     நிரந்தொளி விரிந்தன்றே.
 

      (இ - ள்) ஒளிறுவாள் படை உளர்ந்தது - சுடர்வீசும் வாட்படை அசைந்து
மின்னிற்று, உழைக்கல உழையோர்கள் - வீரர்களுக்குப் பக்கத்தே படைமுதலியன
தாங்கிச்செல்லுநராகிய ஏவலர்கள், கிளர்ந்தனர் - முழங்கினர், நெறித்தலைக் கருமுகில் -
வழிக்கண் அகப்பட்ட கரிய மேகங்கள், களிறுகாத்திரம் உறுத்தலின் நெரிவுற்ற -
யானைகளின் உடல் உராய்ஞ்சு தலாலே நெரிந்தன, குளிறும் இன்இயம் குழுமலில் -
இசைத்தலையுடைய இனிய இசைக்கருவிகள் முழங்குதலாலே, செழுமலைக் கொடுமுடி உடன்
ஆர்த்த - செழித்த மலைகளின் சிகரங்கள் எதிர்ஒலி செய்தன, வெளிறு இல் கேள்வியான் -
பேதைமையில்லாத நூற்கேள்வியையுடைய சடிமன்னனுடைய, பெரும்படை - பெரிய சேனை,
விசும்பிடை நிரந்து - இவ்வண்ணம் விண்ணிடத்தே பரவி, ஒளி விரிந்தன்று ஏ - ஒளியைப்
பரப்பிற்று, (எ - று,)

     விரிந்தன்று - விரிந்தது. வாட்படை அசைந்தது ; உழையோர்கள் ஆரவாரித்தனர்;
யானைகள் உரிஞ்சுதலாலே முகில்கள் நெரிந்தன; இசைக் கருவிகள் முழங்குதலாலே
மலைச்சிகரம் எதிரொலி செய்தன; இவ்வாறு சடியரசன் படை விண்ணில் விரிந்து திகழ்ந்தது
என்க.
 

 ( 48 )


     (பாடம்) 1. யுணர்ந்தது.