பக்கம் : 575
 

     மலைச் சந்தனத்திரள்களை - செழிப்புடைய மலையினின்றும் தான் வாரிக் கொடுவந்த
சந்தனக்குறடுகளை, கரைமேல் வைத்து அரைக்கும் - கரையாகிய கல்லின் மேலேயிட்டு
அரைக்கின்ற, மற்று இது - இக்கங்கையாற்றின் வெள்ளம், குணகடற்றிரையொடும் -
கீழைக்கடலின் அலைகளோடு, பொருது அலது அவியாதே - போர்செய்து அடங்குவதன்றி
இடையே அமையாது என்பதாம், (எ - று.)

     அஞ்சிறைப் பறவைகள்போலக் சுட்டம் கூட்டமாய்ப் பெயர்ந்து செல்லும் இனவண்டு
எனினும் ஆம். இலையம் - லயம் - அலைகள் ஒன்றுபோல அனைத்தும் கரையை மோதி
மோதி மீள்தலின் இலயம்பட, என்பார் இலையத்தால் என்றார். இலையம் - கூத்து,
கூத்திடுமாறுபோல எனினும் பொருந்தும்.
 

( 51 )

சிந்து நதியின் சிறப்பு
878.

முந்து மற்றிதன் முதன்மலைப்
     பிறந்துநம் மலையது முழைப்பேருஞ்
சிந்து வென்பது வலத்தது
     செழுங்கலஞ் சிதர்கின்ற நிகழ்யாறு
நுந்து 1பொன்னொளித் திரையெனுங்
     கரதலப் புடங்களி னுரையென்னும்
பந்து பொங்கநின் றடித்திடத்
     திளைப்ப தொத்துளதது பகருங்கால்.
 

      (இ - ள்.) முந்து நிகழ் யாறு - பாவாய்! இதோ நம் முன்னர்த் தோன்றி
ஓடும்யாறு, மற்றிதன் முதன்மலைப் பிறந்து - இவ்விமயமலையின் முன்னர் உள்ள அப்
பொன்மலையிலேயே தோன்றி, நம் மலையது முழைப்பேரும் - நமது மலையின்
பிலத்தினூடே வந்திழிகின்றதும், செழுங்கலம் சிதர்கின்ற வலத்தது - பெரிய மரக்கலங்களைச்
சிதைத்தொழிக்கும் விரைவினையுடைய நீர் ஒழுக்குடையதும் ஆகிய, சிந்து என்பது - சிந்து
என்று சிறப்பாகச் சொல்லப்படும் யாறு ஆகும், அது பருகுங்கால் - அதன் எழிலைக்
கூறுமிடத்தே, நுந்து பொன் ஒளித் திரையெனும் - மிகுகின்ற பொன்னிறமுடைய அலைகள்
என்னும், கரதலப்புடங்களின் - தன்கைகளின் நுனியில், நுரை என்னும் பந்து - நுரை
யென்னும் வெண்பூப்பந்து, பொங்க நின்று அடித்திட - உயர்ந்தெழுமாறு நின்று புடைத்து,
திளைப்பது ஒத்துளது - ஆட்டயர்தலை ஒத்துத் தோன்றுகின்றது, (எ - று.)

 


     (பாடம்) 1. பொன் னொளிர்திரை