பக்கம் : 584
 

     நகரத்தையடைந்து, தென்என் தேன் இமிர் - தென்னாதெனா எனப் பாடும் அளிகள்
இசைபாடுகின்ற, திருநிலை அகம் எனும் செறிபொழிலது - திருநிலை அகம் என்னும்
பெயரையுடைய நெருக்கமுடைய பூம்பொழிலை, சேர்ந்தார் - அடைந்தனர், (எ - று.)

     இவ்வாறு சுயம்பிரபைக்கு, அமிர்தபிரபை கூறி வருமளவில், விமானம் சுரமை
நாடடைந்து, போதனநகரின் அணித்தேயுள்ள, திருநிலையகம் என்னும் பூம்பொழிலை
எய்திற்றென்க.
 

( 63 )

 
890.

மோடு விட்டலர் மொய்ம்மலர்க் காவினுள்
பாடி விட்டது பாவைதன் கோன்படை
1கூடி விட்டிளை யாரன கோதைமேன்
மூடி விட்டமர் தேன்முரி வித்தவே.
 

      (இ - ள்.) மோடு விட்டு அலர் மொய்ம்மலர் காவினுள் - உயர்ந்து மலர்ந்துள்ள
மலர்கள் செறிந்த திருநிலையகம் என்னும் அப் பூம்பொழிலில், பாவைதன் கோன்படை -
சுயம்பிரபையின் தந்தையாகிய சடிமன்னனின் படை, பாடிவிட்டது - இயங்கிற்று,
கூடிவிட்டிளையாரன கோதைமேல் - அங்குக் கூடிய இளமையுடைய மகளிரினுடைய மலர்
மாலைகளின்மேல். தேன் - அளிக்குலங்கள், மூடிவிட்டு - மொய்த்து மூடி, அமர் முரிவித்த
- போர்தொடுத்தன, (எ - று.)

     மோடுவிடல் மோடிடல், பாடிவிடுதல் - படைகள் தங்குதல். கூடிவிட்டு - கூடி.
இளையாரன : ஆறாவதன் பன்னை யுருபு. திருநிலையகம் என்னும் பூம்பொழிலிலே
சடிமன்னன் படைகள் இறங்கின; அவ்விடத்தே மகளிரின் குழலிலே வண்டுகள் மொய்த்துப்
போரிட்டன என்க. வண்டுகள் மொய்த்து அமர் செய்தன என்றது அப்பொழில் வளத்தைச்
சிறப்பிக்கும் குறிப்பேதுவாய் நின்றது.
 

( 64 )

 
891.

ஆர்ந்த வெங்களி யானைக் கவுட்புடை
வார்ந்து வீழ்மத மூசிய வண்டினம்
சோர்ந்து வீங்கெருத் திற்றொடர் கண்ணிடைப்
2பேர்ந்து வீழ்வன போலப் பிறழ்ந்தவே.
 

     (இ - ள்.) ஆர்ந்த வெங்களியானை - பொருந்திய வெவ்விய மதக்களிப்பை யுடைய
யானைகளின், கவுட்புடை - கவுளினின்றும், வார்ந்து வீழ்மதம் - ஒழுகுகின்ற மதநீரில்,
மூசிய வண்டினம் - மொய்த்த அளிக்கூட்டங்கள், சோர்ந்து - மயக்க முண்மையால்
சோர்வடைந்து, வீங்குஎருத்திற் றொடர் - பருத்த பிடரின்கண் தொடுக்கப்பட்டுள்ள,
கண்ணிடை கண்ணியாகிய மலர்மாலையின்மேல், பேர்ந்து வீழ்வனபோல, பிறழ்ந்த - போய்
வீழ்ந்து கிடப்பனபோன்று புரண்டன, (எ - று.)


     (பாடம்) 1 கூடியிட்ளை. 2 போர்ந்து.