பக்கம் : 59
 
69. முற்றுநீர் வளாக மெல்லா முழுதுட னிழற்று மூரி
ஒற்றைவெண் குடையி னீழ லுலகுகண் படுப்ப வோம்பிக்
கொற்றவ னெடுங்க ணார்தங் குவிமுலைத் தடத்து மூழ்கி
1மற்றவற் 2கரசச் செல்வ மின்னண 3மமர்ந்த தன்றே.

     (இ - ள்.) கொற்றவன் - பயாபதி மன்னன்; நீர்முற்றும் வளாகம் எல்லாம் -
கடல்நீரால் சூழப்பெற்ற இடங்களை எல்லாம்; முழுதுடன் நிழற்றும் - சிறிதும்
எஞ்சவிடாமல் நிழலைச் செய்கிற; மூரி - பெருமை பொருந்திய; ஒற்றைவெண் குடையின்
நீழல் - ஒப்பற்ற வெண்கொற்றக் குடையின் நிழலிலே; உலகு கண்படுப்ப ஓம்பி -
உலகத்துயிர்களானவைகண் வளரும்படியாகப் பாதுகாத்து; நெடும்கணார் தம் - நீண்ட
கண்களையுடைய வர்களின்; குவிமுலைத் தடத்துமூழ்கி - திரண்ட கொங்கைகளிடத்திலே
படிந்து நிற்குமாறு; அவற்கு - அம்மன்னனுக்கு; அரசச்செல்வம்- அரசாட்சிப் பொருளானது;
இன்னணம் அமர்ந்தது - இவ்வாறு பொருந்துவதாயிற்று. அன்று ஏ : அசை. (எ - று.)

     பயாபதி மன்னனுக்கு அரசியற் பேறும் இன்பப்பேறும் அமைந்த தன்மை இதுவாகும்
என்று கூறிச் சருக்கத்தை முடிக்கிறார். பயாபதி மன்னனுக்கு அரசாட்சிச் சிறப்பிலும்
இன்பப்பெருக்கிலும் எத்தகைய குறைபாடும் இல்லையென்பது கருத்து.

( 34 )

இரண்டாவது நகரச்சருக்கம் முடிந்தது.


     (பாடம்) 1. மற்றவர்க்கு, 2. அரசர் செல்வம், 3. மலர்ந்ததன்றே.