பக்கம் : 595
 

      (இ - ள்.) அடுகடாம் - (நம் யானைகளுள் வைத்து) கொல்லும் இயல்புடைய
களிறுகளும், ஆவிநாறும் - மணங்கமழா நின்ற, அழிமதம் - மிக்க மதம்பொழியும்
இயல்புடைய, கருவி வீழத் தொடுகடா - தம்மேலிட்ட கருவிகள் வீழும்படி கையாற்
றொட்டுச் சிதைக்குமியல்புடைய களிறுகளும்; வயிரத் தோட்டியுடையன - வயிரத்
தோட்டியான் மட்டும் அடக்கப்படும் இயல்புடைய களிறுகளும், தொடர்கள் ஊன்ற -
காலிலே சங்கிலிகளை யாத்தற்கு, விடுகொடா - விட்டுக் கொடாத இயல்புடையனவும்,
வியாளம் நிற்ப - நமது பட்டத்து யானையும் ஒழிய; வன்பணிகள் - வலிய செயல்களையும்,
மெல்லச் செய்யும் - அமைதியாகச் செய்யும் இயல்புடைய, படுகடாக்களிறும் - மதம்படு
களிற்றியானைகளை (த் தேர்ந்துகொண்டு அவற்றை)யும், தேரும் புரவியும் - (அங்ஙனமே
சிறந்த) தேர்களையும் குதிரைகளையும் ; பண்ணு கென்றான் - ஒப்பனை செய்க என்று
பணித்தான், (எ - று.)

     சடிமன்னன் முதலியோரை எதிர்கொண்டழைக்கச் செல்வனவாகலின், சீலமற்ற
களிறுகளை ஒழித்துச் சீலமுடைய களிறுகளையே பண்ணுறுத்துக என்றான் என்க. வியாளம் -
பயாபதியின் பட்டத்து யானையின் பெயர். இதனைப் பின்னர்த் தான் புறப்படும்போது
பண்ணுறுத்தல் வேண்டும் என்னும் கருத்தால் வியாளம் நிற்ப என்றான்.

     களிற்றிற்குக் கூறியவிதனால் தேரும் புரவியும் சிறந்தவற்றையே ஆராய்ந்து
பண்ணுறுத்துக என்றான் என்றும் கொள்க.

 
இக்கருத்தினை,
 


“குறும்பொறை மருங்கிற் குன்றம் போல
இருநில நனைப்ப இழிதரு கடா அத்துக்
கைமிகக் களித்த கவுள தாயினும்
செயிர்கொள் மன்னர் செருவிடத் தல்ல
துயிர்நடுக் குறா வேழம் பண்ணி“
எனவரும் பெருங்கதையினும் (138 : 117 - 21) காண்க.
 

      அடுகடாம், அழிமதம் என்பன ஆகுபெயர். அவ் வியல்புடைய சீலமற்ற களிறுகளைக்
குறித்து நின்றன. கருவி - யானை மேலிடும் அணைகளும் பிறவுமாம். கடா - களிற்றியானை.
விடுகொடா - விட்டுக் கொடாத, இணங்காத என்றவாறு.

 

( 86 )

களிறுகளின் வருகை

913. பணித்தசொல் லதனைக் கேட்டே பகைநிலைக் கந்தி னோடும்
பிணித்தபொற் றொடர்கண் விட்டுப் 1பெயர்ந்தகா னிகள நீக்கி
மணித்தொடர் மருங்கின் 2வீழ்ந்து வரிபுரிக் கச்சை வீக்கி
அணித்தகைப் பாகர் பண்ணிக் கொடியெடுத் தருகு சேர்ந்தார்.

 

(பாடம்) 1. பெயர்த்து - பெயர்த்த. 2. வீழ்ந்து