பக்கம் : 596
 

      (இ - ள்.) பணித்த சொல்லதனைக் கேட்டே - அரசன் கட்டளையைக்
கேட்டவுடனே, பகைநிலைக் கந்தினோடும் பிணித்த பொன் தொடர்கண் விட்டு - எதிர்
எதிர் நிற்றலையுடைய தறிகளோடு கட்டப்பட்ட இருப்புச் சங்கிலியின் பூட்டைத்
திறந்துவிட்டு, பெயர்ந்த கால் நிகளம் நீக்கி - அசைந்த கால்களிற் றளைக்கப்பட்டுள்ள
தளையை விடுத்து, மணித்தொடர் மருங்கின் வீழ்த்து - அழகிய சங்கிலிகளைப் பக்கத்தே
தூங்கவிட்டு, வரிபுரிக் கச்சை வீக்கி - வரிந்து கட்டும் புரியுடைய புரோசைக் கயிற்றைக்
கழுத்தில் வரிந்து, அணித்தகைப் பாகர் - அழகு செய்வதில் தகுதிபெற்ற யானைப் பாகர்கள்
பண்ணி - பண்ணுறுத்து, கொடியெடுத்து அருகு சேர்ந்தார் - கொடிகளை எடுத்துக்கொண்டு
அவற்றின் மருங்கே எய்தினர், (எ - று.)

பகைநிலைக் கந்து - ஒன்றற்கு ஒன்று எதிர் எதிர் நிற்றலுடைய தறி. யானைப்பாகர்
யானைகளைச் சங்கிலித் தளைவீடுசெய்து, காற்றளை களைந்து, வீழ்த்து, வீக்கி பண்ணி
எடுத்து, சேர்ந்தார் என்க.
 

( 87 )

தேர்களின் வருகை

914.

செம்பொன்செய் கிடுகு கோத்துத்
     திகிரிவாய்ப் புளகஞ் சேர்த்திப்
பைம்பொன்செய் பரவைத் தட்டிற்
     பருமணி பதித்த திண்டேர்
கம்பஞ்செய் துலக மெல்லாங்
     கைவளைக் கொள்வ போல
அம்பொன்செய் கொடிஞ்சி நெற்றி
     கொடியெடுத் தணைந்த வன்றே.
 

     (இ - ள்.) செம்பொன்செய் கிடுகு கோத்து - செவ்விய பொன்னால் இயன்ற
கிடுகுகளைக் கோத்து, திகிரிவாய் புளகம் சேர்த்தி - உருளைகளினிடத்தே கண்ணாடிகளால்
ஒப்பனை செய்யப்பட்டு, பைம்பொன் செய் பரவைத் தட்டில் - பசிய பொன்னாற் செய்த
அகலிதாகிய தட்டினையுடையனவும், பருமணி பதித்த -  பரிய மணிகள் பதிக்கப்பட்டனவும்
ஆகிய, திண்தேர் - உறுதியுடைய தேர்கள், உலகம் எல்லாம் கம்பம் செய்து கைவளைக்
கொள்வ போல - இப்பேருலகம் எல்லாம் அஞ்சி நடுங்குமாறு செய்து பக்கங்களிலே
வளைத்துக் கொள்ளப் போவனபோல, அம் பொன்செய் கொடிஞ்சி நெற்றி - அழகிய பொன்தாமரை மொட்டையுடைய தம் நெற்றியிடத்தே, கொடியெடுத்து அணைந்த அன்றே -
கொடிகளைத் தாங்கி வந்து எய்தின, அன்று, ஏ ; அசைகள், (எ - று.)

கிடுகு கோத்துப் புளகம் சேர்த்தி மணிபதித்த தேர்கள் உலகை வளைப்பன போலக்
கொடிஞ்சி, நெற்றிக் கொடி எடுத்து அணைந்த என்க.

( 88 )