(இ - ள்.) ஆண்டுற - ஓர் ஆண்டின் மேலும் இருந்து பழைதாகி இரைந்து ஒலித்து, வேகித்து அழல்கின்ற - உண்பார்க்கு வேகமூட்டிச் சினக்கின்ற, மதுவின் தண்டோடு - கள் நிறைக்கப்பட்ட மூங்கிற் குழாய்களோடு, ஈண்டி நின்று இன வண்டு ஆர்க்கும் இன்சுவை நறவின்சாதி - வண்டினது கூட்டங்கள் நெருங்கி ஆரவாரிக்கும் இனிய சுவையுடைய ஏனையகள் வகைகளும், வேண்டுநர் வேண்டுமாறு - விரும்பியவர்கள் தம் விருப்பப்படியே, விருந்தயர்ந்துயரும் வண்ணம் - விருந்துண்டு மகிழ்ச்சியான் உயரும்படி, தீண்டரும் விஞ்சை வேந்தன் - தொடுதற்கரிய விச்சாதர வேந்தனுடைய, திருநகர்ச் செறிக்க என்றான் - அழகிய அரண்மனையிடத்தே நிரப்புக என்றான், (எ - று.) புதிய பானைகளில் நிரப்பி ஓராண்டு நிலத்திற் புதைக்கப்பட்ட ஒரு வகைக் கள் மூங்கிற் குழாய்களில் அடைக்கப்படுதல் பண்டைக் கால வழக்கம். மதுவின் தண்டு - மது நிறைக்கப்பட்ட மூங்கிற்குழாய். |
(இ - ள்.) தேங்கனி - தெங்கங்கனிகளும், குழவித் தீநீர் - தெங்கிளநீர்க் குரும்பைகளும், செம்பழத் திரள் - தேமா பலா வாழை முதலிய செவ்விய பழக்குவியல்களும், இன் கண்ணி - இனிய மலர்க்கண்ணிகளும். பாங்கு அமை - பக்குவம் அமைந்த, பளிதச் சாதி - கத்தூரி வகைகளும், பாசிலைத் தழையின் கற்றை - வெற்றிலையாகிய தழைக்கற்றைகளும், தீங்கழைக் கரும்பின் கட்டி - இனிய கழியாகிய கரும்பின் சாற்றாலாய கற்கண்டும், திரள் நறைக் கடிகை - திரண்ட சாதிக்காயும், இன்ன - இன்னோரன்ன பிறவும், தோம் கலந்திலாத சொல்லான் - குற்றமற்ற வாய்மையாளனாகிய சடிமன்னனுடைய, தொன்னகர் - அரண்மனையிடத்தே, சொரிக-கொட்டுக, என்றான்-என்று பணித்தான், (எ-று.) தேங்கனி - முதிர்ந்த தேங்காய். குழவித்தீநீர் - இளநீர்க் குரும்பை. பாசிலைத் தழை - வெற்றிலை. தொன்னகர் - திருநிலையகம். பழைதாகலின், அதன்கணமைந்த அரண்மனையையும் தொன்னகர் என்றான். |