பக்கம் : 618
 

 

955.

காமரு பூங்குழைக் காம வல்லிகள்
தாமரி யனையவர் தயங்கி யுண்மையாற்
காமரு பூங்குழைக் காம வல்லிகட்
டாமரி யனையதத் தானை வண்ணமே.
 

     (இ - ள்.) காமரு - விருப்பம் செய்கின்ற, பூஞ்குழைக்காம வல்லிகள் -அழகிய
தோடுகளை அணிந்த காமத்தை உண்டாக்கும் பூங்கொடிகள் போன்ற மகளிர்களும்,
அரியனையவர் - இந்திரனை ஒத்த ஆடவர்களும், தயங்கி உண்மையால் - (அத்தானையின்கண்) விளங்கி இருத்தல் உண்மையால், அத் தானை வண்ணம் - அப்படையினது தன்மை, காமரு - பொழிலிடத்தே பொருந்திய, பூங்குழைக் காமவல்லிகள் - பூங்கொத்துக்களையுடைய
காமவல்லி என்னும் கொடிகள், தாம் - தாவிப் படர்கின்ற, அரி-கற்பகப் பூஞ்சோலையை,
அனையது - ஒத்திருந்தது, (எ-று.)

     காமவல்லி - மகளிர்கள், கற்பகமரத்திற் படரும் ஒரு கொடி. இரண்டாம் அடியில்
உள்ள தாம் : அசை. அரி - சோலை. ஆதலிற் காமவல்லி படர்சோலை கற்பகச் கோலை
எனப்பட்டது. காமவல்லி போன்ற மகளிரும், கற்பகமரம் போன்ற ஆடவரும் உண்மையால்
அப்படைகள் கற்பகப் பூஞ்சோலையை ஒத்தது என்க.
 

( 129 )
 
956.

மணிமருங் குடையன வயிரக் கோட்டின
அணிமருங் 1கருவிய வரைக ளன்னவான்
மணிமருங் குடையன வயிரக் கோட்டின
அணிமருங் கருவிய வரச வேழமே.
 

     (இ - ள்.) அரசவேழம் மணிமருங்கு உடையன - அரசு வாக்கள் மணிவடங்களால் அலங்கரிக்கப்பட்ட பக்கங்களை யுடைமையாலும், வயிரக்கோட்டின - உறுதியான கோடுகளை யுடைமையானும், அணிமருங்குஅருவிய - அழகிய தம் புறங்களிலே மர நீராகிய
அருவிகளை யுடைமையானும், மணிமருங்குடையன - மணிகளைப் பக்கத்தே உடையனவும்,
வயிரக்கோட்டின - உறுதியுடைய கொடுமுடிகளையுடையனவும், அணி மருங்கு அருவிய -
அழகிய தம் பக்கங்களிலே அருவிநீர் ஒழுக்கையுடையனவும் ஆகிய, வரைகள் அன்ன -
மலைகளையே ஒத்தன, ஆல் : அசை, (எ - று.)

     கோடுகள் -(1) யானைக் கோடுகள் (2) மலைச்சிகரங்கள்.
     அருவி -(1) மதநீர் அருவி (2) மலையருவி.
     மணி -(1) மணியாற் செய்த அணிகலன், (2) மணிகள்.
.

( 130 )

     (பாடம்) 1. வரையளன்ன