பக்கம் : 621
 

சடிமன்னன் விசயதிவிட்டர்களைத் தழீஇக் கோடல்

961.

காமரு கவினொளிக் காளை மார்களைத்
தாமரைச் செங்கணாற் றழுவிப் பின்னவர்
பூமரு பொன்வரை யகலம் புல்லினான்
சாமரை நன்னுதற் றடக்கை யானையான்.
 

     (இ - ள்.) காமரு கவின் ஒளிக்காளைமார்களை - விரும்புதற்குக் காரணமாண
அழகையும் புகழையும் உடைய காளை போன்ற விசயதிவிட்டர்களை, சாமரை நன்னுதல்
தடக்கை யானையான் - வெண்சாமரை அணிந்த நல்ல நெற்றியையுடையதும் பெரிய
துதிக்கையுடையதும் ஆகிய அரசுவாவையுடைய சடிமன்னன், தாமரைச் செங்கணால் தழுவி
- முன்னர்த் தனது தாமரை மலரை ஒத்த சிவந்த கண்களாலே அவர்களைத் தழுவுவது
போல விரும்பி நோக்கி, பின் அவர் பூமரு பொன் வரை அகலம் புல்லினான் - மீண்டும்
அவ்விசய திவிட்டர்களுடைய மலர் பொருந்திய பொன்மலையை ஒத்த மார்வங்களைத்
தழீஇக் கொண்டான், (எ - று.)

சடிமன்னன் தன்னை வணங்கிய விசயதிவிட்டர்களை மிகவும் விரும்பி நோக்கிப் பின்னர்த்
தழுவிக் கொண்டான், என்க. சாமரையால் அலங்கரிக்கப்பட்ட நல்லநுதலையுடைய யானை
என்க.
 

( 135 )
பயாபதி மன்னனை அருக்ககீர்த்தி தொழுதல்
962.

1எழில்விரி நெடுவரை யிறைவன் றன்மக
2னழல்விரி சுடரொளி யருக்க கீர்த்தியும்
பொழிலணி போதனத் திறைவன் பொன்னணிக்
கழலவ னடியிணை கையிற் கூப்பினான்.
 

     (இ - ள்.) எழில்விரி நெடுவரை இறைவன்தன் மகன் - அழகைப் பரப்புகின்ற நீண்ட
இமயமலையின் வேந்தனாகிய சடியின் திருமகனாகிய, அழல்விரி சுடரொளி - நெருப்பைப்
போன்று ஒளிக்கற்றைகளை வீசுகின்ற அணிகலன்களையும் புகழையும் உடைய,
அருக்ககீர்த்தியும் - அருக்ககீர்த்தி என்பான், பொழில் அணிபோதனத்து இறைவன் -
பூஞ்சோலைகளாற் பொலிவுறுத்தப்பட்ட போதனமாநகரத்து அரசனும், பொன் அணி
கழலவன் - பொன்னாலியன்ற வீரக்கழல் அணிந்தவனும் ஆகிய பயாபதி மன்னனுடைய,
அடியிணை - திருவடிகளை, கையில் கூப்பினான் - கைகளால் தொழுதான், (எ - று.)

 

     (பாடம்) 1. எழிலவிர். 2. அழலவிர்.