(இ - ள்.) காமரு கவின் ஒளிக்காளைமார்களை - விரும்புதற்குக் காரணமாண அழகையும் புகழையும் உடைய காளை போன்ற விசயதிவிட்டர்களை, சாமரை நன்னுதல் தடக்கை யானையான் - வெண்சாமரை அணிந்த நல்ல நெற்றியையுடையதும் பெரிய துதிக்கையுடையதும் ஆகிய அரசுவாவையுடைய சடிமன்னன், தாமரைச் செங்கணால் தழுவி - முன்னர்த் தனது தாமரை மலரை ஒத்த சிவந்த கண்களாலே அவர்களைத் தழுவுவது போல விரும்பி நோக்கி, பின் அவர் பூமரு பொன் வரை அகலம் புல்லினான் - மீண்டும் அவ்விசய திவிட்டர்களுடைய மலர் பொருந்திய பொன்மலையை ஒத்த மார்வங்களைத் தழீஇக் கொண்டான், (எ - று.) சடிமன்னன் தன்னை வணங்கிய விசயதிவிட்டர்களை மிகவும் விரும்பி நோக்கிப் பின்னர்த் தழுவிக் கொண்டான், என்க. சாமரையால் அலங்கரிக்கப்பட்ட நல்லநுதலையுடைய யானை என்க. |
(இ - ள்.) எழில்விரி நெடுவரை இறைவன்தன் மகன் - அழகைப் பரப்புகின்ற நீண்ட இமயமலையின் வேந்தனாகிய சடியின் திருமகனாகிய, அழல்விரி சுடரொளி - நெருப்பைப் போன்று ஒளிக்கற்றைகளை வீசுகின்ற அணிகலன்களையும் புகழையும் உடைய, அருக்ககீர்த்தியும் - அருக்ககீர்த்தி என்பான், பொழில் அணிபோதனத்து இறைவன் - பூஞ்சோலைகளாற் பொலிவுறுத்தப்பட்ட போதனமாநகரத்து அரசனும், பொன் அணி கழலவன் - பொன்னாலியன்ற வீரக்கழல் அணிந்தவனும் ஆகிய பயாபதி மன்னனுடைய, அடியிணை - திருவடிகளை, கையில் கூப்பினான் - கைகளால் தொழுதான், (எ - று.) |