பக்கம் : 63
 

விசய திவிட்டர்கள் பிறந்தபொழுது உண்டான நன்மைகள்

73. திசையெலாந் தெளிந்தன தேவர் பொன்னகர்
இசையெலாம் பெருஞ்சிறப் பியன்ற வேற்பவர்
நசையெலா மவிந்தன நலியுந் தீவினைப்
பசையெலாம் 1பறந்தன பலர்க்கு மென்பவே.
 

     (இ - ள்.) விசய திவிட்டர்கள் தோன்றிய காலத்திலே; திசைஎலாம் தெளிந்தன -
எல்லா இடங்களும் விளக்கத்தையடைந்தன; தேவர் பொன்நகர் இசை எலாம் பெருஞ்சிறப்பு
இயன்ற - தேவர்களது பொன்னகரத்திற்குரிய புகழெலாம் புதிய பெரிய சிறப்பு எய்தின;
ஏற்பவர் நசை எலாம் அவிந்தன - நல்குரவாளருடைய அவாமுற்றும் இயல்பாகவே
அடங்கின; நலியும் தீவினைப் பசை எலாம் - உயிர்த்தொகைகளை விடாது தொடர்ந்து
வருத்தும் தீவினையாகிய பற்றுக்கள் எல்லாம்; பலர்க்கும் - பெரும்பாலானவர்கட்கும்;
பறந்தன - விட்டு நீங்கின. (எ - று.)

     இசை எலாம் என்பதற்கு இன்னிசை வகைகள் எல்லாம் என்று பொருள் கூறுவாரும்
உளர். விசய திவிட்டர்கள் பிறந்தபொழுது எல்லா இடங்களும் தெளிவடைந்திருந்தன.
மண்ணுலகில் விண்ணகத்தவர் காரணங் கருதிப் பிறப்பெடுக்கும்போது தேவர்கள்
ஒலிக்கருவிகளை முழக்கி விழாக்கொண்டாடுதல் இயல்பு. மக்கள் உண்டான மகிழ்ச்சிப்
பெருக்கால் அரசன் வரையறையின்றித் தானதருமங்களைச் செய்தான். அதனால்
ஏற்பவர்களுடைய பொருளவா முற்றும் ஒழிந்தன எனினுமாம். தீவினைகளும் அஞ்சி
அகன்று போயின. ஏற்பவர் என்றது வறியோரை. நசை வறுமைக்குக் காரணமான
பற்றுள்ளம். நசையின்றேல் வறுமையுமின்று.

     நசை அவிந்தமையும் தீவினைப் பசை பறந்தமையும் விசய திவிட்டர்களின்
கடவுட்டன்மையா னிகழ்ந்தன என்பது கருத்து.

( 4 )

மைந்தர்களிருவரும் மங்கையர் மனதைக் கவர்தல்

74. செய்தமா ணகரியிற் சிறந்து சென்றுசென்று
எய்தினார் குமாராம் பிராய மெய்தலும்
2மைதுழாம் நெடுங்கணார் மனத்துட் காமனார்
3ஐதுலாங் கவர்கணை யரும்பு வைத்தவே.
     

     (பாடம்) 1. அடிக்குறிப்பு தரப்படவில்லை, 2. மைதுழாய், 3. ஐதுலா கவர்கணை.