பக்கம் : 633 | | பிற ஏதுக்கள் பெற்றுச் சிறப்புறுமாயின் அவ்விடத்தே, நிறை என்பது இல்லை - நிறை என்று கூறப்படும் அச்செறிவு சிறிதும் இல்லையாய் ஒழியும்; இங்ஙனமாகலின், அரும்பெறல் இவளது உள்ளம் - பெண்மையாற் சிறந்து பெறற்கரிய பேறாகத்திகழும் இச்சுயம்பிரபையின் உள்ளந்தானும், சென்று - நிறைகடந்து போய், நறைநின்று கமழும் குஞ்சி நம்பிபால் - தேன்மணம் நிலைத்து நின்று கமழ்தலையுடைய தலைமயிரையுடைய திவிட்டன்பால், பட்டது - பொருந்துவதாயிற்று, அன்றே : அசை, (எ - று.) “சிறையு முண்டோ செழும்புனன் மிக்குழீஇ நிறையு முண்டோ காமம் காழ்கொளின்“ (மணிமேகலை) என்னும் அடிகளுடன் இச் செய்யுளை ஒப்புக் காண்க. | ( 155 ) | | 982.. | கோணின்ற மதியம் போலக் குழைமுகஞ் சுடரக் கோட்டித் தாணின்ற குவளைப் போதிற் றாதகங் குழைய மோந்து வாணின்ற நெடுங்கண் காளை வடிவினுக் கிவர மற்றை நாணின்று விலக்க நங்கை நடுவுநின் றுருகு கின்றாள். | (இ - ள்.) கோள்நின்ற மதியம்போலக் குழைமுகம் சுடரக்கோட்டி - ஒருபுடை பாம்பாற் பற்றப்பட்டு நின்ற திங்கள் மண்டிலத்தை ஒத்த தோடுகளையுடைய தன்முகம் ஒளிவிரிக்கும்படி நிலநோக்கி எருத்தம் வளைத்துநின்று, தாள்நின்ற குவளைப்போதில் - நாளத்தோடிருந்ததொரு குவளைமலரை, தாது அகம்குழைய மோந்து - பூந்துகள் பொருந்திய அதன் அகமலர் குழைந்து போமாறு மோந்து நிற்பாளாய், நங்கை - அச்சுயம் பிரபை, வாள்நின்ற நெடுங்கண் காளைவடிவினுக்கு இவர - வாள்போன்ற தன் நெடிய கண்கள் (அவனை எமக்குக் காட்டுக என்று அவன் எழில் காண விதுப்புற்றுப்) பாயாநிற்பவும், மற்றை நாண்நின்று விலக்க - (ஏடி நங்கை நீ ஏதிலான் பாற் செல்லவும் போதுமோ ? நில் என) நாணம் இடைநின்று தடுப்பவும், நடுவுநின்று உருகுகின்றாள் - இவற்றிடையே நின்று (மற்று என் செய்வாள் பாவம்) உள்ளம் உருகுவாளாயினாள், (எ - று.) பின்னலுடைய தலை, இராகுவாற் பற்றப்பட்டிருந்த திங்கட்குவமை. கோள் - ஈண்டு இராகு. தன் உள்ளத்தே சடுதியிற் றோன்றிய நாணத்தாலே தலைகுனிந்தாள் என்க. குனிந்தவளைக் கண்கள் காட்டுதி என்று வருத்த நாணம், காணற்க எனத் தடுக்கவும் இடைநின்று வருந்தினள் என்க. “காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென் நோனா வுடம்பி னகத்து“ (திருக்குறள் - 1163) என்னும் குறளையும் நோக்குக. | ( 156 ) |
| | | |
|
|