பக்கம் : 635
 

சலாகை - கம்பி; ஆயிரங் கண்களாலே கண்டு மகிழ்தற்கேற்ற அழகுடைய சுயம்பிரபை,
தோளார் மெல்லடி பரவச் சென்று, தாதை அடி வணங்கி நின்றாள் என்க.
 

(158)

சடிமன்னன், சுயம்பிரபையைப் பயாபதியை
வணங்கப் பணித்தல்

985.

மங்கையை வலத்துக் கொண்டு மாலையுங் குழலுந் தோடு
மங்கையாற் றிருத்தி மாம னடிகளைப் பணிக வென்று
செங்கயற் கண்ணி தாதை செவ்விரல் குவியப் பற்றிப்
பங்கயப் பழன னாடன் பாதமூ லத்து வைத்தான்.
 

     (இ - ள்.) மங்கையை - சுயம்பிரபையை, வலத்துக்கொண்டு - தன் வலப்பாகத்திலே
கொண்டு, மாலையும் குழலும் தோடும் - அவள் அணிந்துள்ள மாலையையும் அவளுடைய
அளகத்தையும் தோடுகளையும், அங்கையால் திருத்தி - தனது அழகிய கைகளாலே
சீர்திருத்தி, மாமன் - நின் மாமன் (ஆகிய பயாபதி மன்னனின்), அடிகளைப் பணிக என்று
- திருவடிகளிலே வீழ்ந்து வணங்குவாயாக என்று கூறி, செங்கயற்கண்ணி தாதை - சிவந்த
கயல் மீன்களை ஒத்த கண்ணையுடைய சுயம்பிரபையின் தந்தையாகிய சடியரசன், செவ்விரல்
குவியப்பற்றி - சுயம்பிரபையின் செவ்விய விரல்கள் குவியும்படி தன் கைகளால் பற்றி,
பங்கயப் பழன நாடன் - தாமரை மலர்ந்த கழனிகளையுடைய சுரமை வேந்தனுடைய, பாத
மூலத்து வைத்தான்-திருவடிகளிலே அவள் கரங்கள் பொருந்துமாறு வைத்தான், (எ-று.)

சடிமன்னன், நங்கையை வலத்தே கொண்டு திருத்தி, மாமன் அடிகனைப் பணிக என்று,
விரல் பற்றி நாடன் பாதத்தே வைத்தான், என்க.
 

( 159 )

பயாபதி சுயம்பிரபையைப் பாராட்டல்

986.

மருமகள் வணங்க முன்னே வலப்புடைக் குறங்கி னேற்றிக்
கருமைகொள் குவளைக் கண்ணி கழிநலக் கதிர்ப்பு நோக்கித்
திருமக ளிவளைச் சேருஞ் செய்தவ முடைய காளை
அருமைகொ டிகிரி யாள்தற் கையமொன் றில்லை யென்றாள்.