பக்கம் : 638
 

      (இ - ள்.) ஆங்கு - அவ்வண்ணமாக, அரசர் அமர்ந்து பேசி - பயாபதி,
சடிமன்னர்கள் தம்முள் விரும்பி அளவளாய்ப் பேசி, அணங்கனாளை - தெய்வமகள்
போன்ற சுயம்பிரபையை, பூங்கமழ்சோலை வேலிப் பொன்னகர் புகுக என்ன - மலர்கமழும்
பூம்பொழிலை வேலியாகவுடைய அழகிய கன்னிமாடத்தே செல்க என்று பணித்தருள,
தேங்கமழ் குழலினாரும் தாயரும் செவ்வி காப்ப - மணங்கமழும் அளகத்தையுடைய
தோழியரும் செவிலியரும் தன்னை அமயத்திற்கேற்றவாறு காவல் செய்ய, ஒளி வீங்கு
விமானத்துச்சி வெண்ணிலா முற்றம் சேர்ந்தாள் - ஒளிமிக்க விமானத்தின் உச்சிக்கண்
அமைந்த வெள்ளிய நிலாமுற்றத்தை எய்தினாள், (எ - று.)

செவ்வி காத்தல் - செவ்விக் கேற்றவாறு காவல் செய்தல். செவ்வி - அமயம். இவ்வாறு
பயாபதி முதலிய அரசர் பாராட்டிய பின்னர், நங்கையை நகர் புகுதுக என்ன, அவளும்
குழலினாரும், தாயரும், காப்ப விமானத் துச்சியின்கண் நிலாமுற்றத்தை எய்தினாள் என்க.
 

( 163 )

சுயம்பிரபை படர்மெலிந்திரங்கல்
990.

மதுநனைந் தலர்ந்த தாரான்
     றிறத்தையான் மறப்ப னென்னின்
விதிநனி துரப்ப மீட்டு
     நினைப்பதே விளைக்கு முள்ளம்
இதுநனி 1யறியு மோவிவ்
     வுலகமென் றிதயத் தோடும்
புதுநனை விரிந்த கோதைப்
     பொன்னனாள் 2புலம்பு கொண்டாள்.
 

     (இ - ள்.) மதுநனைந்து அலர்ந்த தாரான் - தேனால் நனைக்கப்பட்டு மலர்ந்த
மலர்மாலையையுடைய அத் திவிட்டனுடைய, திறத்தை யான் மறப்பன் என்னின் - அழகை
யான் மறந்துவிட நினைத்தால், உள்ளம் - என்னெஞ்சமோ, விதிநனி துரப்ப - ஊழ் நன்கு
தூண்டுதலாலே மீட்டும் நினைப்பதே விளைக்கும் - மீளவும் அவன்றிறத்தையே
நினைக்கும்படி தோற்றுவியா நிற்கும், இவ்வுலகம் - இப்பேதையுலகம், இது நனியறியுமோ -
இவ்வாறாதலை நன்கு அறியுமோ ? அறியமாட்டாது, என்று - என்று தன் நெஞ்சொடு
சொல்லி, புதுநனை விரிந்த கோதை - புதுவதாக அரும்பிமலர்ந்த மாலையையுடைய
சுயம்பிரபை, இதயத்தோடும் - தன்நெஞ்சுடனே, புலம்பு கொண்டாள் - பிணங்கித்
தனிப்படர் மிகுதி என்னும் நிலையை எய்தினாள், (எ - று.)

நம்பியை யான் மறப்பவே முயல்வேன்மன் அவ்வெண்ணம் தானே என்னுள்ளத்தே
கிளர்ந்தெழுகின்றது, உலகம் இதனை ஒப்புமோ ஆதலால் நெஞ்சே நீ நல்லை யல்லை
என்றாள் என்க.


     (பாடம்) 1. யறியுமே. 2. புலம்பு.