பஞ்சாலியன்ற விளக்கமுடைய அமளிமிசை வீற்றிருந்தவள், ஒளி பரந்து திருவில் வீச - அணிகலன் முதலியவற்றின் பல்வேறுவகை ஒளிகள் பரவி இந்திர வில்லிட, மஞ்சு இலங்கு உருவ வானின் மழையிடை - வெண்முகில்கள் விளங்குகின்ற அழகிய விசும்பின் கண்ணே கருமுகில்களின் ஊடே, நுடங்கும் மின்போல் - துவள்கின்ற மின்னற்கொடியைப் போன்று தோன்றி, அஞ்சிலம்பு அடியினார் தம் - அழகிய சிலம்புகளையணிந்த அடிகளையுடைய அம்மகளிருடைய, அறிவினை அயர்வித்திட்டாள் - அறிவு மயங்கும்படி செய்தாள், (எ - று.) மஞ்சு - வெண்மேகம் : இது பஞ்சணைக்குவமை. திருவில் - இந்திரவில். மழையிடை மின்னென்றார்; கூந்தலிடைத் தோன்றும் சுயம்பிரபை திருமேனியை. தெய்வப் பாவை, வில்வீச, மழையிடை நுடங்கு மின்போல், அம்மகளிர் அறிவினை அயர்வித்திட்டாள் என்க. |
(இ - ள்.) மற்றவர் காணும்போழ்தின் - அம்மகளிர்கள் அவ்வண்ணம் சுயம்பிரபையைப் பார்க்கும் அமயத்தில், சுற்றிய சோதி பளிங்குச் சுவர்மிசை - சூழ்ந்துள்ள ஒளிமிக்க பளிங்குச் சுவரின்மேல், அன்னாள் தோன்ற - அச்சுயம்பிரபையின் உருவம் தோன்றிற்றாக, மாதவசேனை என்பாள் - மாதவசேனை என்னும் அத்தவமகள் அந்நிழலுருவைப் பார்த்து, இற்று இவள் உருவம் என்றாங்கு - இத்தன்மைத்து இவளுடைய உருவத்தின் அழகு என்று ஊன்றி எண்ணி, அவ்விடத்தே, இதயத்துள் எழுதிவைத்து - தன் உள்ளமாகிய கிழியிலே அவள் உருவமாகிய ஓவியத்தைத் தீட்டிவைத்து, பிற்றை ஓர் பலகை தன் மேல் - பின்னர் ஒரு பலகையின்மேல், பெய்வளை எழுதலுற்றாள் - அம்மாதவ சேனை, சுயம்பிரபையின் உருவ ஓவியத்தைப் பொறிக்கத் தொடங்கினாள், (எ - று.) பெய்வளை - மாதவசேனை, மகளிர்கள் நங்கையை இவ்வாறு காணும் பொழுது மாதவசேனை, சுயம்பிரபையின் சோதியால் அவளை நேரிற் காணமாட்டாதவளாய், அயலிலுள்ள பளிங்குச் சுவரில் அவள் உருவம் சிறிது ஒளிகுன்றித் தோன்றலைக் கண்டவள், அவ்வுருவினை முன்னர்த் தன் உள்ளக்கிழியில் எழுதிக்கொண்டு, பின்னர்ப் பலகையிலே எழுதத் தொடங்கினாள், என்க. |