பக்கம் : 647
 

      என்று முன்னர்க் கூறிப் பின்னர், எங்கள் முன் மொழிய - உம் மாமியாரடிகட்கு
நீவிர் கூறும் வார்த்தையை எங்கள்பால் இயம்புவதனால், ஆங்கு ஏதும் இல்லையன்றே -
அவ்விடத்தே உண்டாகுமொரு குற்றமும் இல்லை அல்லவா, என்றாள் மாதவ சேனை
என்பாள் - என்று மாதவசேனை என்பவள் கூறினாள், கோதிலாக்குணக் கொம்பன்னாள் -
அழுக்கற்ற குணமுடைய பூஞ்கொம்பை யொத்த சுயம்பிரபையும் அது கேட்டு, குறுநகை
முறுவல் கொண்டாள் - நுண்ணிதிற் புன்முறுவல் பூத்தாள், (எ - று.)
ஆதலால், நும்மாமியாரடிகள் பால் நும்மொழியாக யாங்கள் கூற ஏதேனும் எம்பாற்
கூறியருள்க; அவ்வாறு கூறுதலால் ஏதமிலதன்றே என்று மாதவ சேனை கூறினாள்;
அதுகேட்டு நங்கை புன்முறுவல் பூத்தாள் என்க.
 

( 177 )

அமிர்தபிரபையின் விடை
1004.

அங்கவள் குறிப்பு நோக்கி யமுதமா பிரபை யென்னு
மங்கலத் தோழி கூறும் மாமியா ரடிக டம்மை
1எங்கண்மெய்ச் செய்கை யாக விணையடி பணிமி னென்றாள்
செங்கனி கனிந்த செவ்வாய்ச் சிறுநுதற் பெரிய கண்ணாள்.
 

     (இ - ள்.) அங்கு அவள் குறிப்பு நோக்கி - அவ்விடத்தே அச்சுயம்பிரபையின்
கருத்தை முகக்குறிப்பான் உணர்ந்து, அமுதமா பிரபையென்னும் மங்கலத்தோழி -
அமிர்தபிரபை என்னும் நன்மைமிக்க தோழி, கூறும் - மாதவசேனைக்குக் கூறுவாள்,
மாமியாரடிக டம்மை - எம்முடைய மாமிப்பெரியாரை, எங்கள் மெய் செய்கையாக - நுங்கள்
உடலாற் செய்வதனை எங்கள் உடலாற் செய்வதாக நீயிர் கருதிக்கொண்டு, இணையடி
பணிமின் என்றாள் - அவரது இணைந்த திருவடிக்கண் யாங்கள் பணியுமாப்போலே நீயிர்
எம்பொருட்டுப் பணியக்கடவீர் என்றாள், அவள் யாரெனில், செங்கனி கனிந்த செவ்வாய்
சிறுநுதல் பெரிய கண்ணாள் - சிவந்த கொவ்வைப்பழம் கனிந்தாற்போற் சிவந்த
வாயையுடையவளும், சிறிய நெற்றியையுடையவளும் பெரிய விழிகளையுடையவளுமாகிய
அமிர்தபிரபை, (எ - று.)

சுயம்பிரபையின் குறிப்புணர்ந்த அமிர்தபிரபை மாதவ சேனைக்குக் கூறுவாள்:
“மாமியாரடிகள் தம்மை எங்கள் மெய்ச் செய்கையாக இணையடி பணிமின்Ó என்றாள் என்க
இஃது உங்கண்கள் என் கண்களாகக் காண்மின் என்ற கோப்பெருந்தேவி
மொழிக்கேற்புடையதாதல் அறிக.
 

( 178 )

     (பாடம்) 1. எங்கடஞ் - எங்கள் - எங்கள் செய்கையதாக.