பக்கம் : 65
 
     விசயன் எவ்வாறிருப்பான் என்பதை இச் செய்யுளில் கூறுகிறார். வலம்புரிச் சங்கைப்
போன்ற வெள்ளிய உடலையுடையவன்; தாமரையின் அகவிதழைப் போன்ற கண்; இருள்
திரண்டாற்போன்ற குஞ்சியையுடையவன்; தூ - தூய. தூய இருள் என்றது, ஒளிக்
கலப்பற்றுச் செறிந்த இருள் என்றவாறு. நல்ல இருள் என்பது உலக வழக்கு. அழகிய
குண்டலங்கள் அசைகின்ற காதுகளையுடையவன். வலம்புரி - வலப்பக்கமாகச் சுழிந்துள்ள
சங்கு. அகவிதழ் அழகிலும் மென்மையிலும் சிறந்ததாகலின் உவமைக்கு அதனையெடுத்தார்.
அகவிதழ் தடுத்த - அகவிதழின் தன்மை முழுவதையும் புறத்தே செல்லவிடாது தடுத்துத்
தன்னிடத்தே அடக்கிக்கொண்ட. தூம் மருள் - என்பதனை தூமம் என்பதன் இடைக்
குறையாகக்கொண்டு புகையை ஒத்த இருள் என்று பொருள் கூறுவாரும் உளர். அங்ஙனம்
கூறுதல் உவமைக் குவமையாயிருக்கும்.

 ( 6 )

மாலை, மார்பு, கை, நிறம், தோள், நடை ஆகியன

76. வாடலில் கண்ணியன் மலர்ந்த மார்பினன்
1தாடவழ் தடக்கையன் றயங்கு சோதியன்
கோடுயர் குன்றெனக் 2குலவு தோளினன்
பீடுடை நடையினன் பெரிய நம்பியே.

     (இ - ள்.) வாடல் இல் கண்ணியன் - வாடுதல் இல்லாத மாலையை அணிந்தவன்;
மலர்ந்த மார்பினன் - விரிந்த மார்பையுடையவன்; தாள் தவழ் தடக்கையன் - முழங்கால்
அளவும் நீண்டு விளங்கும் பெரிய கையை உடையவன்; தயங்கு சோதியன் - விளங்குகின்ற
உடல் ஒளியை உடையவன்; கோடுஉயர் குன்று என - உயர்ந்த உச்சியினையுடைய குன்று
போல; குலவு தோளினன் - விளங்குகின்ற தோள்களையுடையவன்; பீடு உடை நடையினன்
- சிங்கவேற்றின் பெருமித நடையைப்போலும் நடையை உடையவன்; பெரிய நம்பி -
பெரியவனான விசயன். (எ - று.)

     இச் செய்யுளும் விசயனைப்பற்றியே கூறுகின்றது. வாடலில் கண்ணியன் என்றமையின்
விசயனுடைய தெய்வத்தன்மை விளங்குகின்றது. கைகள் நீண்டிருத்தல் ஆடவர்கட்கு
நல்லியல்பாகும். தோளுக்குக் குன்று உவமை. நம்பி - ஆடவரிற் சிறந்தவன்; குவவுத்
தோளினன் என்னும் பாடத்திற்குப் பருத்த தோள்களையுடையவன் என்று பொருள்
கொள்க.

( 7 )


     (பாடம்) 1. தாள் தவிழ், 2. குவவுத் தோளினன்.