அதுவேயுமன்றி, சுயம்பிரபை தன் தோழியின் வாயால் கூறிய திருமொழியும் ஒன்றுண்டு; அது யாதெனில், “யாம் வணங்கும் உரிமையை நீயிர் கொண்டு, எம் மாமியாரடிகளை எம்பொருட்டு வணங்குக' என்பதாம், என்றாள் என்க. |
(இ - ள்.) என்று அவள் மொழிந்த போழ்தில் - இவ்வாறு மாதவசேனை கூறியவுடன், இலங்கொளிப் பலகை தன்மேல் - திகழ்கின்ற ஒளியையுடைய அப்பளிக்குப் பலகையின் மேலே வரைந்த, மின்றவழ் மேனியாளை - ஒளி தவழ்கின்ற உருவமுடைய சுயம்பிரபையின் ஓவியத்தை, மெல்பணைத் தோளில் புல்லி - தன் மெல்லிதாய்ப் பருத்த தோளிலே பொருந்தக்கொண்டு தழீஇ, இருந்தவப் பயங்கள் நம்பால் ஒன்றின விளைந்த - யாம் ஆற்றிய பெரிய நோன்பின் பயன்கள் அனைத்தும் ஒருசேரத் திரண்டனவாகித் தோன்றின ஆதலானே, இன்று இனிதாகும் அன்றே - இந்நாள் ஏனைய நாள்களையும் காட்டில் இனிமை மிக்க நன்னாளே ஆகும் அல்லவா, என்று - என்று கூறி, ஒளியினால் புதியளானாள் - விம்மிதத்தால் உண்டாகிய புதிய ஒளியைப்படைத்துப் புதியவள்போல் தோன்றினாள், (எ - று.) மாதவசேனை அவ்வாறு கூறியவுடன், அவ்வோவியப் பலகையைத் தழீஇ, “இருந்தவப் பயன்கள் ஒன்றின விளைந்த இன்று இனிதாகும் என்றான், என்க. |