பக்கம் : 653 | | (இ - ள்.) போது அவிழ் அலரி நாறும் - இதழ்கள் விரிந்த மலர்மணங் கமழும், புரி குழல் - பின்னுதலையுடைய அளகத்தையுடைய, உருவப் பாவை - அழகிய சுயம்பிரபையின், சோதி சூழ் வடிவு - ஒளிமொய்க்கின்ற ஓவிய உருவத்தை, நம்பி சுடர்மணி வண்ணன் காண - நம்பியாகிய ஒளியுடைய மரகத மணிபோன்ற வண்ணமுடைய திவிட்டன் காணுமாறு, மாதவசேனை - ஓ மாதவசேனாய்!, காட்டவல்லையோ?- நீ அவனுக்குக் காட்ட மாட்டுவையோ? என்ன - என்று சசிதேவி வினவ, அடிகள் - அடிகளே!, யாம் உருவம் உணரின் அன்றே - யாம் சுயம்பிரபையின் உருவச் சிறப்பை நன்கு உணர்ந்தாலன்றோ, ஐயற்கு ஓதுவது என்றாள் - திவிட்டநம்பிக்கு அவள் உருவங்காட்டி ஓதவல்லோம் ஆவோம் என்று மாதவசேனை உரைத்தாள், (எ - று.) இத்திருவுருவப் படத்தை ஐயற்குக் காட்டுமாற்றால் சுயம்பிரபையின் எழில் முற்றும் அவன் உணர்த்தப்பட்டவன் ஆகான். எடுத்தியம்பற்கும் யாமும் நன்கு உணர்ந்தோமில்லை; ஆயினும் இதனை நம்பிக்கு யான் காட்டுவல் என்றாள், என்க. “ஆயினும் நம்பிக்கிதனைக் காட்டுவல்Ó என்பது குறிப்பெச்சம். | ( 187 ) | மாதவசேனை, அவ் வோவியத்துடன் திவிட்டன்பாற் சேறல். | 1014. | மற்றவ டொழுது போகி மணிவண்ணன் மகிழ்ந்த கோயிற் 1சுற்றிநின் றெரியுஞ் செம்பொற் சுடர்மணி வாயி னண்ணி இற்றென விசைத்துப் புக்காங் கிளையவன் கழல்கை கூப்ப வெற்றுநீ வந்த தென்றாற் கிதுவெனா வெடுத்துச் சொன்னாள். | (இ - ள்.) மற்றவள் தொழுது போகி - அம்மாதவசேனை என்பாள் சசிதேவியை வணங்கி அவணின்றும் சென்று, சுற்றி நின்று எரியும் செம்பொன் சுடர்மணி - தன்னைச் சூழ்ந்து ஒளிக்கற்றைகள் பொருந்தி விளங்கும் செவ்விய பொன்னாலியன்ற ஒளிரும் மணிகள் பொருந்தியதும், மணிவண்ணன் மகிழ்ந்த - திவிட்டனால் விரும்பி உறையப்பட்டதும் ஆகிய, கோயில் வாயில் நண்ணி - அரண்மனை வாயிலை அடைந்து, இற்றென இசைத்துப்புக்கு - தான் வந்த காரியம் இத்தன்மைத்தென்று வாயில் காவலருக்குக் கூறி அரண்மனையின் உள்ளே சென்று, ஆங்கு இளையவன் கழல் கைகூப்ப - அவ்விடத்தே திவிட்டநம்பியைக் கண்டு அவன் அடிகளை வணங்கினாளாக, எற்று நீ வந்ததென்றாற்கு - மாதவசேனையே நீ வந்த காரியம் யாதென வினவிய திவிட்டநம்பிக்கு, இது எனா எடுத்துச் சொன்னாள் - மாதவசேனையான் வந்த காரியம் இஃதென்று எடுத்துக்கூறத் தொடங்கினாள், (எ - று.) | |
| (பாடம்) 1. சுற்று நின். | | |
|
|