பக்கம் : 654
 

மாதவசேனை, தொழுது, போகி, வாயில் நண்ணி, இசைத்துப்புக்கு, கைகூப்ப, ஏற்று
நீவந்தது? என்ன, இற்றெனச் சொன்னாள், என்க.
 

( 188 )

மாதவசேனை நினக்கோர் அருங்கலம் கொணர்ந்துளேன் எனல்

1015.

அருங்கல முலகின் மிக்க வரசர்க்கே யுரிய வன்றிப்
பெருங்கல முடைய ரேனும் பிறர்க்கவை 1பேண லாகா
2இருங்கலி முழவுத் தோளா யெரிமணிப் பலகை மேலோர்
நெருங்கொளி யுருவங் கொண்டு நின்னையா னினைந்து வந்தேன்.
 

     (இ - ள்.) உலகின் மிக்க அருங்கலம் - உலகத்தே பெறலரும் பெருஞ்செல்வமாகிய
முடிக்கலங்கள், அரசர்க்கே உரிய அன்றி - மன்னர்களுக்கே உரிமையுடையன ஆதலன்றி,
பெருங்கலம் உடையரேனும் - மிகுந்த செல்வமுடையராயினும், பிறர்க்கு - அரசரல்லாத
மற்றோர்க்கு, அவை பேணல் ஆகா - அவ் வருங்கலங்கள் விரும்புதற்கு உரியன
ஆகமாட்டா, இருங்கலி முழவுத் தோளாய் - பெரிய ஓசையையுடைய மத்தளம் போன்ற
தோள்களையுடைய நம்பியே!, எரிமணிப் பலகைமேல் ஓர் நெருங்கொளியுருவம் கொண்டு -
சுடர்மணிப் பளிக்குப் பலகையின்கண் எழுதப்பட்ட ஒளிசெறிந்த ஓவிய உருவம் (ஆகிய
அருங்கலம்) ஒன்றைக் கைக்கொண்டு நின்னை யான் நினைந்து - இவ்
வருங்கலத்திற்குரியார் யாரென ஆராய்ந்து நீயே உரியை யாவை என எண்ணி, வந்தேன் -
அதனைக் கொண்டுவந்துள்ளேன், (எ - று.)
உயரிய முடிக்கலன் அரசர்க்கே உரிய ஆகலால் தோளாய்! இப்பலகையில் ஓர் ஒளி
உருவமாகிய அருங்கலம் கொண்டு, உன்னை நினைந்து வந்தேன், என்றாள் என்க.
 

( 189 )

திவிட்டன் அவ் வோவியங் கண்டு வியப்புறுதல்

1016.

அப்படித் தாயிற் காண்பா மென்றன னரச நம்பி
மைப்புடை நெடுங்க ணாளு மருங்குநின் றவரை நீக்கிக்
கைப்புடைப் பலகை மேலாற் கன்னிய துருவங் காட்ட
மெய்ப்புடை தெரிய மாட்டான் விருந்துகொண் மனத்த னானான்.

    

 

     (பாடம்) 1. பேச. 2. வருங்கலி.