பக்கம் : 656 | | திவிட்டன் இது சுயம்பிரபையின் உருவம் போலும் எனக் கருதல் | 1018. | மண்மிசை மகளி ரின்ன வடிவுடை யவர்க ளில்லை விண்மிசை மடந்தை யல்ல ளாய்விடின் விஞ்சை வேந்தன் கண்மிசை நவிலுங் காதற் கன்னிய துருவ மாமென் றெண்மிசை யிவரும் போழ்தி னிதுவென வவளுஞ் சொன்னாள். | (இ - ள்.) மண்மிசை மகளிர் இன்ன வடிவுடையவர்கள் இல்லை - இம் மண்ணுலகத்தே வாழும் மானிடமகளிர்களில் இத்தகைய சிறப்புடைய உருவம் உடையார் யாரும் இலர், விண் மிசை மடந்தை யல்லள் ஆய் விடின் - மற்று நீ கூறியாங்கு இவள் தேவமகளும் இல்லை என்னின், விஞ்சை வேந்தன் - சடிமன்னன், கண் மிசை நவிலும் - தன் கண்ணினும் சிறந்தவளாகக் கருதுகின்ற, காதற் கன்னியது உருவம் ஆம் என்று - காதல் மிக்க சுயம்பிரபையின் உருவமே ஆதல் வேண்டும் என்று, எண்மிசை இவரும் போழ்தின் - தனது ஆராய்ச்சிமேல் கருதும் பொழுது, இது என அவளும் சொன்னாள் - அக்கருத்தைக் குறிப்பான் அறிந்த மாதவசேனையும் அவ்வுருவமே இஃது என்று கூறினாள், (எ - று.) வானவர் மகள் அல்லள் பின் இவள் யார் என்றாட்கு மண் மகள் அல்லள் இவள் விஞ்சைமகளே போலும் என்று கருத, மாதவசேனை அது என்றாள் என்க. | ( 192 ) | | 1019. | கன்னிய துருவங் காளை காண்டலுங் 1கேடில் காமன் பொன்னியல் கழலன் றாரன் 2பூட்டிய சிலைய னாகி மன்னிய விற்கை நோக்கி மலரணி கணையு நோக்கித் துன்னிய பொழுது 3நோக்கிச் சுடுசரந் 4தொடுக்க லுற்றான். | (இ - ள்.) கன்னியது உருவம் காளை காண்டலும் - சுயம்பிரபையின் திருவுருவத்தைத் திவிட்டன் இவ்வாறு கண்டவுடனே, கேடு இல் காமன் - தன் தொழிலிற் கெடுதலில்லாது வெற்றியே கொள்ளும் காமவேள் என்பான், பொன்னியல் கழலன் - பொன்னாலியன்ற வீரக்கழல்களைக் கட்டியவனாய், தாரன் - மாலையை அணிந்தவனாய், பூட்டிய சிலையன் ஆகி - நாண் ஏற்றிய வில்லையுடையவனாய்ப் போர்க்கோலம் பூண்டு, கை மன்னிய வில் நோக்கி - தன் கையின்கட் பொருந்திய கரும்பு வில்லையும் நன்கு பார்த்து, அணிமலர்க்கணையும் நோக்கி - அழகிய மலரம்புகளையும் நன்கு பார்த்து, துன்னிய பொழுதும் நோக்கி - தன் செயலுக்கு ஏற்றதாய்ப் பொருந்தியுள்ள காலத்தையும் நன்கு பார்த்து, சுடுசரம் தொடுக்கலுற்றான் - (சீர்த்தவிடமாதல் கண்டு கொக்கின் குத்தொக்க விரைந்து) சுடுகின்ற அம்புகளை வில்லிற் றொடுத்து ஏவினான், (எ - று.) | |
| (பாடம்) 1. கேட்ட. 2. பூமுடி. 3. நோக்கா. 4. துரக்க. | | |
|
|