(இ - ள்.) மணவாய மல்லிகையின் மதுநனைந்து - மணங்கமழ்தரும் வாயினையுடைய மல்லிலை மலர்க்கண்ணதாகிய தேனிற்றோய்ந்து, வண்கனிகள் மதர்ப்ப வீசி - வளப்பமுடைய கனிகள் செழிப்பனவற்றின் மேலே வீசி, இணர்வாய வனமுல்லை இதழ்வாரி - கொத்துக்களையுடைய காட்டுமுல்லை மலரின் இதழ்களை அள்ளிக்கொண்டு, இளந்திங்கள் கதிர் காலூன்றி - இளமையுடைய பிறையினது ஒளியாகிய நிலவில் பொருந்தி, துணைவு ஆய சுரும்பிரங்க - காதற்றுணைமையாகிய பெடைகளையுடையவாகிய வண்டுகள் பாட, அரவிந்தவனத்து உதிர்ந்த - தாமரைக் காட்டில் உதிர்ந்த, துகளும் சீத்து - பூந்துகளையும் வாரிக்கொண்டு, திணைவாய கருங்குவளை திளைத்து - நெய்தற்றிணையின் கண்ணவாகிய நீலோற்பல மலர்களினூடே அளைந்து, அசைக்கும் - இயங்குகின்ற, தென்றலும் ஒன்று உடைத்தே மாலை - தென்றல் என்னும் ஒரு பொருளையும் உடைத்தாயிருந்தது இம்மாலைக்காலம், (எ - று.) ஒன்று இன்னல்தரும் ஒரு பொருள். துணைவு - துணைமை; துணைமையுடையனவாகிய சுரும்பு என்க. மதுவில் நனைந்து வீசி, இதழ்வாரிக் கதிர் காலூன்றி, சுரும்பிரங்கத் துகளும் சீத்துத் திளைத்து, அசைக்கும் தென்றல் என்க. |