பக்கம் : 67
 
     மங்கலம் மழகளிறு அனைய செல்கையன் - நன்மைபொருந்திய யானைக்கன்றின்
நடையைப்போன்ற அழகிய நடையை யுடையவன்; இங்கு முன் மொழிந்தவற்கு இளைய
நம்பி - இங்கே முன்பு கூறப்பட்ட விசயனுக்கு இளையவனாகிய திவிட்டன் என்பான்.
(எ - று.)

     சங்கரேகை சக்கரரேகை ஆகியவைகள் தங்கப்பெற்றிருத்தல் நல்லிலக்கணமாகும்.
செங்கயல் என்ற பாடங்கொண்டு - சிவந்த கயல் மீனும் என்று பொருளுரைத்து மச்சரேகை
சங்கரேகை சக்கரரேகை என்று கூறுதலும் ஒன்று. மேலே 114 ஆம், செய்யுளில் சங்க
லேகையும் சக்கர லேகையும், அங்கையுள்ளன வையற் காதலால்“ என்று கூறுவர்.
அங்கையன் - அகம் + கை “அகம் முனர்க்கைவர இடையன கெட்டன“ (நன்-மெய்-19)
என்னும் விதிப்படிகொண்டு அகங்கையையுடையவன் எனினுமாம். மழ, இளமையை
யுணர்த்தும் உரிச்சொல் “மழவுங் குழவும் இளமைப் பொருள“ என்பது சூத்திரம்.

 ( 9 )

இருவரும் இளமை எய்துதல்

79. திருவிளைத் துலகுகண் மலரத் 1தெவ்வர்தம்
புரிவளை நன்னகர்ச் செல்வம் புல்லென
வரிவளைத் தோளியர் மனத்துட் காமநோய்
எரிவளைத் திடுவதோ 2ரிளைமை யெய்தினார்.
 

     (இ - ள்.) திருவிளைத்து - செல்வத்தை மிகுதிப்படுத்தி; உலகு கண்மலர - உலகம்
விளக்கத்தையடைய; தெவ்வர்தம் - பகைவர்களுடைய; புரிவளை - கோட்டையாலே
சூழப்பெற்ற; நல்நகர்ச் செல்வம் - நல்ல நகரங்களிற் பொருந்தியுள்ள செல்வம்; புல் என -
பொலிவழிய; வரிவளைத் தோளியர் மனத்துள் - வரிகள் அமைந்துள்ள வளையல்களை
யணிந்துள்ள தோள்களையுடைய பெண்களின் உள்ளத்துள்; காமநோய் - இன்பநோயானது;
எரி - தீயைப்போல்; வளைத்திடுவதோர் - வளைத்துக் கொள்ளத்தக்க; இளமை எய்தினார் - காளைப் பருவத்தையடைந்தார்கள். (எ - று.)

 

     (பாடம்) 1. தேவர் தம். 2. இளமை.