பக்கம் : 670
 

     தாமரை, கோன் அடிக்கீழ்ச் சேர்ந்த நன்மையால் அணங்கி, உயிர்த்து, அலர்ந்து,
ஏந்தி நிழற்றும், அஃதங்ஙனமாயின், அவன் அடியை நினைந்து வணங்கும் தொழில் ஒன்றே
உடைய அடியார், ஒளியும், களிப்பும், வியக்கற்பால வல்லவே என்றாள், என்க.
 

( 213 )

 

1040.

மணிமரு டிருமொழி வாமன் சேவடி
யணிமரு ளுருவுடை யமிர்தின் சாயலாள்
பணிமொழி பலவுடன் பரவி வாழ்த்தினாள்
பிணிமொழி பிறவிநோய் பெயர்க வென்னவே.
 

     (இ - ள்.) அணிமருள் உருவுடை - அழகு மருள்தற்குக் காரணமான
உருவத்தையுடைய, அமிர்து இன்சாயலாள் - அமிழ்தம் போன்று இனிய சாயலையுடைய
சுயம்பிரபை, மணிமருள் திருமொழி - மணிகளை ஒத்த அறமொழிகளை உரைத்தருளிய
வாமன் சேவடி - அருகனுடைய செய்ய திருவடிகளை, பணிமொழி பலவுடன் பரவி -
இவ்வாறு பணிமொழிகள் பலவற்றைக் கூறுதலுடனே புகழ்ந்து, பிணிமொழி பிறவிநோய் -
பிணியுடைத்தென அறிஞர்களால் கூறப்படுகின்ற பிறவியாகிய நோய், பெயர்க என்ன ஏ -
அடியேங்கட்கு ஒழிவதாகுக என்று கூறி, வாழ்த்தினாள் - வாழ்த்துவாளாயினாள், ஏ : அசை,
(எ - று.)

“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை“ என்பவாகலின், நங்கை பிறநலங்கள் வேண்டாது
பிறவாமையே வேண்டினள் என்க.
 

( 214 )

சுயம்பிரபையின் காம வேட்கை.

1041.

வென்றவன் றிருவடி வணங்கி மெல்லவே
சென்றுதன் வளநகர்ச் செம்பொன் மாளிகை
நின்றொளி விரிவதோர் நிலவு வேதிகை
முன்றில்சென் றெய்தினாண் முகிழ்த்த வேட்கையாள்.
 

     (இ - ள்.) வென்றவன் - திருவடி - காமனைவென்ற வாமன் திருவடிகளை, வணங்கி -
வாழ்த்தி வணங்கிய பின்னர், மெல்லவே - பைப்பய, சென்று - அங்கிருந்து சென்று,
தன்வளநகர் செம்பொன் மாளிகை - தனது வளமுடைய கன்னிமாடமாகிய செவ்விய
பொன்னாலியன்ற மாளிகையின்கண் உள்ள, நின்று ஒளி விரிவதோர் வேதிகை - நிலைத்து
நின்று ஒளிவிரிக்கின்ற மேடையினையுடைய, நிலவுமுன்றில் சென்று எய்தினாள் - நிலா
முற்றத்தே சென்றடைந்தாள், முகிழ்த்த வேட்கையாள் - இறைவணக்கம் செய்த
பொழுதெல்லாம் அகத்தே அடங்கி யிருந்து அஃதொழிதலும் முகிழ்த்தலையுடைய
காமவேட்கையையுடைய சுயம்பிரபை, (எ - று.)