பக்கம் : 676
 

     (இ - ள்.) முல்லையின் முருகு கொப்புளித்து - முல்லை மலரின்கண் உள்ள தேனைக்
கொப்புளித்து, மூரல்வாய் மல்லிகை யிணர்த்துணர் மயக்கும் - புன்முறுவலையுடைய
வாயவாகிய மல்லிகைப் பூங்கொத்துக்களிலே பொருந்தும்; மாருதத்து எல்லியும் -
தென்றலையுடைய இரவும், இளம்பிறைக் கதிரும் - இளமைத்தாகிய பிறையினது
நிலவொளியும், மெல்லியல்வர்களை - காமநோயான் மெலிந்தவர்களை, மெலிவு செய்ய
என்ப - மேலும் மெலியும்படி வருத்துவன என்று அறிஞர் கூறுவார்கள்; ஏயும் ஆலும்
அசைகள். மயக்கும் - மயங்கும்; வலித்தல் விகாரம், (எ - று.)

பிரிவாற்றாமையான் மெலிந்தோரை நலிவன தென்றலும் பிறையும் என்ப என்றாள் என்க.
கூடிய வழி இவை அவர்க்கு ஆக்கம் செய்வனவாம் என்பது அவள் கருத்து.
 

( 225 )

 

1052.

விரைசெறி புரிகுழல் வேற்க ணங்கைதன்
புரைசெறி கடிவினை நாளைப் 1போழ்தென
முரைசெறி யிமிழிசை முழங்கக் கேட்டனன்
உரைசெறி மறுகிலென் றொருத்தி கூறினாள்.
 

     (இ - ள்.) விரைசெறி புரிகுழல் - மணம் நிறைந்த பின்னலையுடைய அளகத்தையும்,
வேல்கண் நங்கைதன் - வேல் போன்ற கண்களையுமுடைய சுயம்பிரபையின், புரைசெறி
கடிவினை - மாண்புமிக்க திருமணவினை, நாளைப்போழ்து என - நாளையே நிகழ்வதாம்
என்று, முரசு எறி இமிழ் இசை முழங்க - முரசத்தை எறிதலாலே எழுந்த ஒலி முழங்குதலை,
உரைசெறி மறுகில் கேட்டனன் - பேச்சொலிமிக்க வீதியினிடத்தே யான் கேட்டேன், என்று
ஒருத்தி கூறினாள் - என்று ஒரு தோழி இயம்பினாள்,
(எ - று.)

இவள் மொழிகள் நங்கையுளத்தைக் குளிர்வித்திருக்கும் என்பதில் ஐயம் இன்று. உரை செறி
மறுகு என்றாள் - யாரும் இம்மணவினையைப் பற்றியே பேசுகின்ற தெருவென்றற்கு;
எனவே, மணவினை நாளையே எனப் பேசக்கேட்டலே யன்றி, முரசெறி இசையும் முழங்கக்
கேட்டுளேன் என்றாள், என்க.
 

( 226 )

 

1053.

நாளைநா ளென்பது 2நனித்துஞ் சேய்த்தென
வாளையா நெடுங்கணீர் மயங்கி யென்னையிக்
கோளையாம் விசும்பிடைக் குளிர்வெண் டிங்களார்
தாளையாம் வணங்குபு தாழ்ந்து கேட்டுமே.

    

 

     (பாடம்) 1. யாமென. 2. நணித்துஞ், நணித்துச்.