பக்கம் : 678 | | | 1055. | இன்னன நகைமொழி யின்பக் கோட்டியோ டன்னமென் னடையவ ளமர வாயிடை மன்னவற் 1கேழிசைத் தெழுந்த தூரியங் கன்னியுங் கடிகம ழமளி யேறினாள். | (இ - ள்.) இன்னன - இவை போல்வன, நகைமொழி - நகைச்சுவை பொருந்திய மொழிகளை இயம்பும், இன்பக் கோட்டியோடு - இன்பத்திற்குக் காரணமான தோழியர் குழாத்துடனே, அன்னம் மெல்நடையவள் அமர - அன்னம்போலும் மெல்லிய நடையினையுடைய சுயம்பிரபை உறையாநிற்ப, ஆயிடை - அப்பொழுது, மன்னவற்கு - திவிட்ட நம்பிக்கு, தூரியம் - மங்கலப்பறைகள், ஏழிசைத்து - இரவின் நாழிகை ஏழாதலையுணர்த்தும் பொருட்டு, எழுந்த - முழங்கின, கன்னியும் - சுயம்பிரபையும், கடிகமழ் அமளி ஏறினாள் - மணங்கமழ் தரும் மலரணையின் கண்ணே ஏறுவாளாயினள், (எ - று.) திவிட்டனுக்குப் படுக்கைக்குச் செல்லுதற்குரிய ஏழாம் நாழிகையை உணர்த்தும் மங்கலப்பறை முழங்கின. அதுகேட்ட சுயம்பிரபையும் அமளியில் ஏறினாள் என்க. இரவின் ஏழாம்நாழிகை படுக்கைக்குப் போகும்நேரம் என்பதும் அதனை அறிவிக்க மங்கலப்பறை முழக்கப்படும் என்பதும் இதனால் உணரப்படும். தூரியம் - ஈண்டு மங்கலப்பறை. | ( 229 ) | பிறை மறைதல் | 1056. | மல்லிகை மணங்கமழ் மாலை போகலும் பல்லிய மவிந்தன பரந்த பாற்கதிர் மெல்லவே மெல்லவே 2சுருங்கி வீங்குநீ ரெல்லைசென் றொளித்ததவ் விளவெண் டிங்களே. | (இ - ள்.) மல்லிகை மணங்கமழ் மாலை போகலும் - மல்லிகை மலரின் மணம்மிக்குக் கமழ்கின்ற அம்மாலைக் காலம் இவ்வாறு கழிந்தவுடனே, பல்லியம் அவிந்தன - இசைக்கருவிகள் ஒலி அடங்கின, பரந்த பால் கதிர் - பரவிய பால் போன்ற நிலாச்சுடர், மெல்லவே மெல்லவே - மெல்ல மெல்ல, சுருங்கி - குறையா நிற்ப, இளவெண்டிங்கள் - அற்றைநாள் இளம்பிறை, வீங்குநீர் எல்லைசென்று - மிக்க நீரையுடைய குடகடலின் அகத்தே போய், ஒளித்தது - மறையலாயிற்று. ஏ மூன்றும் அசைகள், (எ - று.) மாலைக் காலத்தே மல்லிகை மலர்தலின் “மல்லிகை மணங்கமழ்மாலை“ என்றார். மாலை போகலும் பல்லியம் அவிந்தன, இளவெண்டிங்கள் மெல்லக் கதிர் சுருங்னி ஒளித்ததென்க. | ( 230 ) |
| (பாடம்) 1. கேழிகை, கெழுந்த. 2. சுருங்கு. | | |
|
|