பக்கம் : 680
 

 

1059.

மடந்தையர் முலைமுக மடுத்த மார்பினர்
அடைந்துதே னுறங்கிய வலங்கன் மாலையார்
மிடைந்ததோ டழூஉப்பிணை நெகிழ மெல்லவே
இடங்கழித் தொழிலொழிந் திளையர் 1துஞ்சினார்.
 

     (இ - ள்.) இளையர் - இளமை மிக்க ஆடவர், மடந்தையர் முலைமுகம் -
இளமகளிராகிய தம் காதலிமார்களின் முலைக்குவடுகள், மடுத்த மார்பினர் - குத்தப்பட்ட
மார்பினையுடையராய், தேன் அடைந்து உறங்கிய அலங்கல் மாலையார் - வண்டுகள்
மொய்த்துறங்குதலையுடைய மலர்மாலையையுடையராய், மிடைந்த தோள் தழூஉ
பிணைமெல்ல நெகிழ - தம்முள் நெருங்கிய தோள்களைத் தழுவி இணைதலாகிய செயல்
மெல்ல நெகிழ்ந்தவராய், இடங்கழித்தொழில் ஒழிந்து - அக்கலவித் தொழிலை விட்டு,
துஞ்சினார் - உறங்குவாராயினர், (எ - று.)

தழூஉட் பிணை - தழுவிப் பிணைதல் ; இடக்கரடக்கல். இடையாமமாகலின் வண்டுகளும்
அலங்கற் பள்ளியிற் றுயின்றன என்க. இடங்கழித் தொழில் - கலவித் தொழில். காம
மிக்கவிடத்தே நிகழும் தொழில் என்பது கருத்து.
 

( 233 )

பேய்களின் தன்மை

1060.

மதுக்கடை 2வழிபிழித் 3துவலை நாவளைத்
தொதுக்கமும் வெறியயர் களனு மூடுலாய்ச்
செதுக்கமும் பலிபெறு தெருவுந் தேர்ந்துபோய்க்
4கதுப்புகுந் துறங்குபு கழுதுஞ் சோர்ந்தவே.
 

     (இ - ள்.) மதுக்கடை வழி பிழித்துவலை நாவளைந்து - கள்விற்கும் கடைகளிலே
வழிந்து ஒழுகும் கள்ளினது துளிகளைத் தம் நெடிய நாவால் வளைத்துப் பற்றிச் சுவைத்து,
ஒதுக்கமும் - மக்கள் வழக்கற்ற ஒதுக்கிடங்களினும், வெறியயர்களனும் - வெறியாட்டயரும்
களங்களினும், ஊடுலாய் - ஊடே சென்று சுற்றி, செதுக்கமும் - நாற்சந்திகளிடத்தும்,
பலிபெறு தெருவும் - தெய்வங்கள் பலி கொள்ளும் தெருக்களிடத்தும், தேர்ந்துபோய் -
தமக்குரிய இரையினை ஆராய்ந்து சென்று, கதுப்புகுந்து - மலைமுழைஞ்சுகளிலே புகுந்து,
உறங்குபு - உறங்கி, கழுதும் - பேய்களும், சோர்ந்த ஏ - அறிவு சோர்தல் உடையவாயின,
ஏ : அசை, (எ - று.)

இஃது இடையாமத் தியல்பு கூறிற்று. இதன்கட் பேய்களின் செயல் அழகாகக் கூறப்பட்டமை
காண்க. செதுக்கம் - சதுக்கம் ; நாற்சந்தி. கது - குகை. ஒதுக்கம் - மக்கள் வழக்கற்றவிடம்.
 

( 234 )

     (பாடம்) 1. வைகினார். 2. நறும்பிழித். 3. திவலை நாவனைந். 4. கதுப்பிகுத்.