பக்கம் : 682
 

உலகின் றன்மை

1063.

1மன்னிய மணித்தடத் தாம்பல் வாய்குடைந்
தின்னியன் மாருத மியங்குங் கங்குல்வாய்க்
கன்னியுங் காளையு மொழியக் காரிரு
டுன்னிய வுலகெலாந் துயில்கொண் டிட்டதே.
 

     (இ - ள்.) மன்னிய மணித்தடத்து - நிலைபெற்ற அழகிய குளங்களினுள்ள, ஆம்பல்
வாய்குடைந்து - ஆம்பல் மலர்களினகத்தே துளைந்து, இன்னியல் மாருதம் - இனிய
இயல்புடைய தென்றல், இயங்கும் - தவழ்கின்ற, கார் இருள் துன்னிய கங்குல்வாய் - கரிய
இருள் செறிந்த அவ்விரவின்கண்ணே, உலகெலாம் - இப்பெரிய உலகம் அனைத்தும்,
கன்னியும் காளையும் ஒழிய - சுயம்பிரபையும் திவிட்டநம்பியும் ஒழிய, துயில் கொண்டது ஏ
- உறங்கிற்று, ஏ : அசை, (எ - று.)

தென்றலியங்கும் அவ்விரவின் இடையாமத்தே நங்கையும் நம்பியுமொழிந்த அனைத்துயிரும்
துயின்றன என்க.

“மன்னுயி ரெல்லாந் துயிற்றி அளித்திரா
உன்னல்ல தில்லை துணை“ (திருக். 1168)

என்னும் குறட் கருத்திதனுட் போந்தமை காண்க.
 

( 237 )

வைகறையின் வருகை

1064.

நள்ளிரு ளிடையது நடப்ப வைகறை
புள்ளிமி ழிசையொடு புகுந்து போம்வழித்
தெள்ளிய மதியவன் செய்த தீமைபோன்
மெள்ளவே கனையிருண் மெலிவு சென்றதே.
 

     (இ - ள்.) நள் இருள் இடையது நடப்ப - செறிந்த இருளையுடைய இடையாமம்
இவ்வாறு கழிந்ததாக, புள்ளிமிழ் இசையொடு - பறவைகள் உறக்கம் நீத்தெழுந்து பாடுகின்ற
இசையோடே, வைகறை புகுந்து போம்வழி - வைகறையாமம் தோன்றி நிகழ்கின்றபோது,
கனையிருள் - செறிவுடைய இருள், தெள்ளிய மதியவன் - தெளிந்த அறிவுடையொருவனால்,
செய்த தீமைபோல - செய்யப்பட்ட தீமையைப் போன்று, மெல்லவே மெலிவு சென்றது -
பைப்பய மெலிந்து போயிற்று, (எ - று.)

தெள்ளிய மதியவன் ஒரோவழி ஊழினாலே தீமை செய்தானாயின் அதற்குப் பெரிதும் நாணி
அத்தகைய தீமை மீண்டும் நிகழாது தற்காப்ப அத்தீமை குறைந்து வருதல்போலே இருள்
குறைந்தது என்க.
 

( 238 )

     (பாடம்) 1. மண்ணியல்.