பக்கம் : 69
 

மங்கையர் மயங்குதல்

81. கடலொளி 1மணிவணன் கனவில் வந்தெம
துடலகம் வெறுவிதா யுள்ளம் வவ்வினான்
விடலில னெம்முயிர் விடுக்குங் கொல்லென
மடவர லவர்குழா மயக்க முற்றதே.
 

     (இ - ள்.) கடல்ஒளி மணிவணன் - கடலின் ஒளியைப் போலும் அழகிய
நிறத்தையுடைய இளைய நம்பியாகிய திவிட்டன்; கனவில்வந்து - கனவின்கண்ணே
தோன்றி; எமது உடல் அகம் வெறுவிதாய் - எமது உடலானது ஒன்றுமில்லாததாக; உள்ளம்
வவ்வினான் - மனதைக் கவர்ந்து கொண்டு சென்றான்; விடல் இலன் - அவன்
அவ்வுள்ளத்தை எம்பால் விடுகின்றான் இல்லை, எம்உயிர் விடுக்கும் கொல்என -
உள்ளமற்ற படியினாலே எமதுயிரானது போய்விடுமோ என்று; மடவரல் அவர்குழாம் -
இளம் பெண்களது கூட்டம்; மயக்கம் உற்றது - மனச்சுழற்சியை அடைவதாயிற்று. (எ - று.)

     திவிட்டனைக் கனவிற் கண்டு உள்ளத்தைப் பறிகொடுத்த மங்கையர் கூற்று இது. பிற
ஆடவர்களை மங்கையர் எண்ணலாமோ எனின் இம்மடவரல் குழாம் மணமாகப் பெறாத
கன்னிகையர் குழாம் என்க. உடலகத்திற்கு உள்ளந்தான் உயிர்நாடியாகவுள்ளது.
அவ்வுள்ளம் பறிபோய்விடின் பின்னர் உடலகம் வெறுவிதாகும்.

( 12 )

நங்கையர் மனதில் விசயன்

82. வார்வளை வண்ணனென் மனத்து ளான்பிறர்
ஏர்வளர் நெடுங்கணுக் கிலக்க மல்லனாற்
கார்வளர் கொம்பனா ரிவர்கள் காமநோய்
ஆர்வளர்த் தவர்கொலென் பவரு மாயினார்.
 
     (இ - ள்.) வார்வளை வண்ணன் - நீரில் தோன்றுகின்ற சங்கைப்போலும் வெள்ளிய
நிறமுடையவனான விசயன்; என் மனத்து உளான் - என்னுடைய உள்ளத்தின் கண்ணே
இருக்கின்றான்; பிறர் - மற்றவர்களது; ஏர்வளர் நெடும் கணுக்கு இலக்கம் அல்லன் -
அழகு பொருந்திய நீண்ட கண்கட்கு அவன் காணப்பெற மாட்டான்; அவ்வாறாகவும்;
கார்வளர் கொம்பு அனார் இவர்கள் - கார்காலத்தே வளராநின்ற கொழுவிய பூங்கொடியை
ஒத்த இம்மகளிருடைய; காமநோய் - அவாநோயை ஆர் வளர்த்தவர் என்பவரும்
ஆயினார் - யார் மிகுதிப்படுத்தியவர்கள் என்று கேட்பவர்களும் சிலர் உளராயினார்.
(எ - று.)
 

     (பாடம்) 1. மணிவண்ணன்.