பக்கம் : 694
 

 

1088.

அங்கணயி ராவணமி ரண்டுடனெ டுத்த
மங்கலம ணிக்கலச நீர்சொரிய வாடிப்
பொங்குதிரை 1யொன்றிருபு 2யற்பொலிய வேந்தித்
தங்கு 3புனல் பெய்ததட மால்வரையொ டொத்தான்.
 

     (இ - ள்.) அங்கண் அயிராவணம் இரண்டு உடன் எடுத்த - அழகிய
கண்களையுடைய யானைகளிரண்டு ஒருசேர எடுத்த, மணிக்கலச மங்கலர நீர் சொரிய -
மணிகள் பதிக்கப்பட்ட குடங்களின் நிறைந்த கடவுட்டன்மை யுடைய நீரைப் பொழியாநிற்ப,
ஆடி - மங்கல நீராடுதலைச் செய்து, இருபுயல் - இரண்டு முகில்கள், பொங்கு திரை ஒன்று
- மிக்க அலைகளையுடைய கடலின்கட் சேர்ந்து, தங்குபுனல் பொலிய ஏந்தி - அங்குத்
தங்குதலையுடைய நீரை அழகுறச் சுமந்து கொணர்ந்து, பெய்த தடமால்வரை ஒத்தான் -
பொழியப்பட்ட பெரிய மலையை ஒத்துத் தோன்றினான், (எ - று,)

அயிராவணம் - ஒரு கடவுளியானை - அக்கடவுளியானையை ஒத்த யானைகள் என்றபடி,
அயிராவணம் அனைய, இரண்டு யானைகள் ஒருசேர மணிக்கலச நீரைச் சொரிய ஆடிய
நம்பி, இரண்டு மேகங்கள், கடல் முகந்து தன் உச்சியில் ஒருசேரச் சொரியப் பெற்ற, பெரிய
மலையை ஒத்தான் என்க.
 

( 262 )

 

1089.

மன்னர்கள்சொ ரிந்தமணி நீரருவி யாடிப்
பின்னைமலர் மாரியகல் வானினவர் பெய்ய
மின்னவிர்வி ளங்குசுடர் வேல்விடலை 4மெய்யிற்
பொன்னணிபு னைந்துபுது வேள்விநகர் புக்கான்.
 

     (இ - ள்.) மன்னர்கள் சொரிந்த மணி நீர் அருவியாடி - அரசர்கள் பொழிந்த
நீலமணி போற் றெளிந்த நீர் அருவியில் குளித்துப், பின் அகல்வானினவர் மலர் மாரி
பெய்ய - பின்பு விரிந்த விசும்பில் வாழும் அமரர்கள் மலர்மழை பொழியா நிற்ப, மின்
அவிர் விளங்குசுடர் வேல்விடலை - மின்னலைப் போன்று ஒளிர்ந்து விளங்குகின்ற
சுடரையுடைய வேல் ஏந்தும் திவிட்டநம்பி, மெய்யில் பொன்அணி புனைந்து - தனது
திருமேனியில் பொன்னாலியன்ற அணிகலன் ஆடை முதலியவற்றை அணிந்துகொண்டு, புது
வேள்விநகர் புக்கான் - புதியதாக இயற்றப்பட்ட திருமண வேள்விமன்றத்தை எய்தினான்,

நம்பி, மன்னர்கள் சொரிந்த மங்கல நீராடி, வானவர் மலர் மாரி பெய்ய, பொன்னணி
புனைந்து, மணமண்டபம் புக்கான், என்க.
 

( 263 )

     (பாடம்) 1. யொன்றிரண்டு. 2. மேகருடனேந்தி. 3. புயல். 4. யாடிப்.