பக்கம் : 695
 

 

1090.

மங்குன்மழை சூழுமணி மால்வரையின் மேலார்
கங்கைமுத னீரருவி கொண்டுகலி வான
மெங்குமிட மின்றியெழில் விஞ்சையரி ழிந்தார்
நங்கைமண நீரணியை நாமொழிவ தென்னோ?
 

     (இ - ள்.) மங்குல் மழை சூழும் மணி மால் வரையின் மேல்ஆர் - கரிய முகில்
சூழ்ந்துள்ள அழகிய பெரிய இமயமலையின்கட் பொருந்திய, கங்கைமுதல் நீர்
அருவிகொண்டு - கங்கையே முதலிய கடவுட்புனல்களை முகந்துகொண்டு, கலி வானம்
எங்கும் இடமின்றி - ஒலியையுடைய விசும்பெங்கும் இடமிலாதபடி, எழில் விஞ்சையர் -
அழகிய விச்சாதரர், இழிந்தார் - வந்து இறங்குவராயினர், நங்கை மண நீர் அணியை -
சுயம்பிரபையின் மணமங்கல நீராட்டுவிழாவின் பெருமையை, நாம் மொழிவது என்னோ! -
அறிவுப்பெருக்கம் இல்லாத யாம் கூறுவது என்னாகும்!, (எ - று.)

விஞ்சையர், கங்கை முதலியவற்றின் தீர்த்தங்களைக் கொணர்ந்து, விசும்பிலிடமின்றி
நெருங்கி, நங்கையை மங்கல நீராட்டிய சிறப்பினை, யாம் கூறவல்லே மல்லேம் என்று
தேவர் கூறினர் என்க.
 

( 264 )

 

1091.

ஆறுகுல மால்வரையின் மேலருவி நீரும்
வீறுபெறு மெல்லியலை யாட்டியபின் மீட்டு
நாறுமலர் நந்தனவ னத்தனவொ டெல்லா
வேறுபடு பூமழையு மாடவிளை வித்தார்.
 

     (இ - ள்.) ஆறு - கங்கை முதலிய கடவுட்டன்மையுடையயாறுகளினும், குலமால்
வரைமேல் அருவியும் - கடவுட்டன்மையுடைய இமய முதலிய மலைகளில் வீழும்
அருவிகளினும் உள்ள, நீர் - நீரானே, வீறுபெறும் மெல்லியலை ஆட்டியபின் -
வேறியார்க்கும் இல்லாப் பெருஞ்சிறப்புடைய சுயம்பிரபையை மங்கல நீராட்டிய பின்னர்,
மீட்டும் - மீளவும், மலர் நாறு நந்தனவனத்தனவொடு வேறுபடு எல்லாப் பூமழையும் - மலர்
மணம் கமழும் இளம் பூஞ்சோலைகளின் உள்ளனவும் வேறுள்ளனவுமாகிய நால்வகைப்
பூவானியன்ற மலர் மழையானும், ஆட விளைவித்தார் - ஆடுமாறு செய்வித்தனர், (எ - று.)

ஆறு - எண்ணுப் பெயராகக் கொண்டு ஆறு குலவரை எனினுமாம். விஞ்சையர்
சிறந்தயாறு அருவி முதலியவற்றின் நீராலே நங்கையை ஆட்டிப் பின்னர், நந்தனவன
முதலியவற்றினுள்ள, நாறுமலர் மழையானும் ஆட்டினர், என்க.
 

( 265 )