பக்கம் : 698
 

     ஆரிடம் - இருடி வாசகம்; வைதிகமுறை. முன்னர்ச் சாந்தான் மெழுகிட்ட நிலத்தை,
மறையோதி ஆரிடமறிந்த அந்தணன், சலாகையாலே கீறி மீண்டும் விரைபெருக்கி
மெழுகுவித்தான் என்க. சலாகையால் கீறியது, மணவேள்வி நிகழ்தற்குரிய இடத்தை வரைந்து
கொள்ளற் கென்க.
 

( 269 )

வேள்விமன்றத் தமைதி

1096.

பருத்தமணி முத்தமணல் 1பாய்சதுர மாகத்
திருத்தியொரு 2வால்வளைப யின்றுதிடர் சூழத்
தருப்பையினு னித்தலைவ டக்கொடுகி ழக்காய்ப்
பரப்பின னதற்குமொரு 3வால்வளைப யின்றான்.
 

     (இ - ள்.) பருத்த மணி முத்த மணல் பாய் - பரிய மணியாகிய முத்துக்களையே
மணலாகப் பரப்பி, சதுரமாகத்திருத்தி - அம் மணற்பரப்பைச் சதுர வடிவிற்றாகச்
செய்தமைத்து, ஒருவால் வளைபயின்று - அவ்வளவானே ஒருமுறை மங்கலச் சங்கை
முழக்குவித்துப் பின்னர், திடர்சூழத் தருப்பையின் நுனித்தலை வடக்கொடு கிழக்காய்ப்
பரப்பினன் - அம்மணற்றிடரைச் சூழத் தருப்பைப் புல்லின் நுனிப்பகுதிகள் வடதிசைக்
கண்ணும் கீழ்த்திசைக் கண்ணும் கிடக்கப் பரப்பி, அதற்கும் ஒரு வால் வளை பயின்றான் -
அச் செயலுக்கும் ஒருமுறை மங்கலச் சங்கங்களை முழக்குவித்தான், (எ - று.)
வால்வளை பயிலல் - ஒவ்வொரு கரணத்திற்கும் ஒவ்வொருமுறை மங்கலச் சங்கை
ஒலிப்பித்தல்.
 

( 270 )

 

1097.

நான்முகன்வ 4லத்துநல்லி டத்துமொரு காவன்
மேன்முகமி ருந்துகுண பால்வெறுவி தாகப்
பான்முறைப யின்றபரு திக்கடிகை பாய்த்தித்
தான்முறையி னோதுசமி தைத்தொழுதி சார்ந்தான்.
 

     (இ - ள்.) நான்முகன் வலத்து - நல்லிடத்து - பிரமனுக்குரித்தாகிய
வலப்பக்கத்தினதாகிய சிறந்த இடத்தினும், ஒரு காவல் - ஒரு காப்பு மறைமொழி ஓதியிட்டு,
மேல்முகமிருந்து குணபால் வெறுவிது ஆக - மேற்றிசையினின்றும் கீழ்த்திசைகாறும் வறிதே
கிடக்கவிட்டுப் பின்னர், பால்முறை பயின்ற பருதிக்கடிகை - கூறு கூறாகப் பகுத்துப்
பயின்றனவாகிய
மறைமொழியை ஓதி வேள்வித்தீயை இட்டு, தான் - அவ் வேள்வியாசான், முறையின் ஓது -
முறைப்படி மந்திர மோதுதற்குரிய, சமிதைத் தொழுதி சார்ந்தான் - வேள்வி விறகுத்
தொகுதிகிடந்த இடத்தைஎய்தினன், (எ - று.)

 

     (பாடம்) 1. லாற் சதுர மாகத். 2. பால் பணிய வைத்ததிடர் சூழ்ந்த. 3. பாவனை. 4. லத்தவனிடத்து மொர் கடித்தாய்.