பக்கம் : 705
 

     (இ - ள்.) பொன்னியல் கொடியின் ஒல்கி - பொன்னாலியன்ற பூங்கொடியைப்
போன்று துவண்டு, பூவணை பொருந்தும் பாவை - மலரணையிலே பொருந்திய
சுயம்பிரபையின், கன்னி நாண் ஏற்றம் இதுகாறும் அழிதலைப்பெறாத நாண் என்னும் அப்
பெண்மையின் மிகுதிப்பாட்டை, காளை - திவிட்டன், கண்களி கொள்ள நோக்கி - தன்
கண்கள் பேரின்பமெய்துமாறு கூர்ந்து நோக்கியிருந்து, பின் அவள் ஒடுங்க வாங்கி -
பின்னர் அவள் மேலும் நாணத்தாலே ஒடுங்கிப் போம்படி தன் கைகளாலே எடுத்து,
பெருவரை அகலம் சேர்த்தி - பெரிய மலைபோன்ற தனது மார்பகத்தே அணைத்து,
இன்னகை மழலை கேட்பான் - அவளுடைய இனிய முறுவலோடு கூடிய மழலைச்
சொற்களைக் கேட்டற்கு விழைந்து, என்கொல் இம்மிகை நாண் என்றான் - என் அன்பே!
இத்தகைய மிகையாய நாணத்தை நீ எய்துதற்கு ஏது என்னை? என்று வினவினான், (எ -
று.)

நாணினானிகழ்ந்த மெய்ப்பாடுகளை ஒற்றுமை கருதி நாண் என்றார். நம்பி, பாவை நாண்
ஏற்றம் நோக்கி, பின் அவள் ஒடுங்கவாங்கி, சேர்த்தி, மழலை கேட்பான், இம்மிகை நாண்
ஏன்? என்றான் என்க.
 

( 284 )

கல்வி

1111.

நின்றநா 1ணெனுநீள் கன்னிச் சிறைவிண்டு காளை திண்டோட்
குன்றினாற் செறிக்கப் பட்ட குமரிநீ ரமிர்த யாறு
சென்றுதேன் பகர்ந்து செம்பொற் கலஞ்சிந்தித் திளைத்து விம்மி
அன்றவ னார்வ வெள்ளக் கடலிடை யழுந்திற் றன்றே.
 

     (இ - ள்.) காளை திண் தோள் குன்றினால் செறிக்கப்பட்ட - திவிட்டனுடைய
திண்ணிய தோள்கள் என்னும் மலைகளாலேதேக்கப்பட்ட, குமரி நீர் அமிர்தயாறு -
இளமையினது நீர்மையாகின்ற காதல் என்னும் அமிழ்தப் பேரியாறு, நின்ற நாண் எனும் நீள்
கன்னிச் சிறை விண்டு - அதுகாறும் ஓராற்றானும் அழியாது நிலைத்துநின்ற நாணம் என்னும்
நீண்ட கன்னிமைத் தன்மையாகிய அணையைப் பிளந்து, சென்று தேன் பகர்ந்து செம்பொன்
கலம் சிந்த - ஓடித் தேன்போன்று ஒலித்து செவ்விய பொன்னணிகலன்களைத் சிதறி,
திளைத்து விம்மி - அளைந்து பெருகி, அன்று - அந்த நாளிலே, அவன் - அத்
திவிட்டநம்பியின், ஆர்வ வெள்ளக் கடலிடை - வேணவா வென்னும் வெள்ளமிக்க காதற்
கடலகத்தே, அழுந்திற்று அன்றே - கலந்தொன்றாயது, அன்றே : அசை, (எ - று.)
 

 

     (பாடம்) 1. ணென்னும்.