(இ - ள்.) திருமேனி - இவள் திருமேனியோவெனில், செங்குவளை நாறும் - செங்கழுநீர் மலரின் நறுமணம் கமழ்வதொன்றாயிருக்கும், செவ்வாயும் ஈர் இதழும் - செவ்விய வாயும் இரண்டாகிய அதரங்களுமோவெனில், அக்குவளை ஆம்பலும் நாறும் - அழகிய நீலோற்பல மலரின் நறுமணத்தையும் ஆம்பல் மலரின் நறுமணத்தையும் தம்பாற் கமழப்பெறுவனவா யிருக்கும், இங்கு இவளை - இவ்விடத்தாளாகிய இச்சுயம்பிரபை நல்லாளை, முன் படைத்த தேவன் - முன்னர் இத்தகையளாய்ப் படைத்த இறைவனோவெனில், என் இன்னுயிரை - என் ஆருயிரை, பைங்குவளை மாலையாட்கு - பசிய குவளைமலர் மாலையை அணிந்துள்ள இவட்கு, ஆளாய்ப் படைத்தானே - கணவனாம் மாத்திரையே படைத்தொழிந்தான். ஏ - இரண்டும் ஆலும் அசைகள், (எ - று.) இவள் மேனி குவளை நாறும், செவ்வாயும் இதழும் ஆம்பனாறும், இங்ஙனம் இவளைப் படைத்தான், என்னை இவட்குக் கணவனாந்துணையே படைத்தான் என்றான் என்க. என்றது என் மேனி முதலியன இவட்கேற்ப இயற்கை மணமுடையனவல்ல என்றவாறு. |
(இ - ள்.) இணைநெடுங்கண் பூம்பாவை - இணைந்த நெடிய கண்களையுடைய தாமரைமலரின் மேலுறையும் திருமகள், அளிய என் - இரங்கத்தக்க என்னுடைய நெஞ்சத்தே, அன்பு உருகு காமத்தீ முன்மாட்டி - அன்பு உருகுதற்குக் காரணமான காம நெருப்பை முற்பட மூட்டி, என்புருக வேவ - யான் என் என்புகள் உருகும்படி வேகாநிற்கும்பொழுது, பெருகு முந்நீர் அமுதாய் விளைத்து - பெருகாநின்ற பாற்கடல் அமுதம்போன்று இன்பத்தை யுண்டாக்கும் பொருட்டு, இனிய மின் பருகும் நுண் இடையார் - காண்டற்கினிய மின்னலையும் தனது ஒளியால் விழுங்குமியல்புடைய நுண்ணிய இடையை உடைய இச்சுயம்பிரபையாரின், மெல்லுருவம் கொண்டது - மெல்லிய உருவத்தை மேற்கொண்டதொரு செயல்போலும்,(எ - று.) வேவ - வேகச்செய்தென்க. விளைத்து என்னும் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக. முன் என்பதனை முன்மாட்டி என ஒட்டுக, பூம்பாவை - திருமகள். திருமகள் எனக்கு இன்பம் விளைக்க இவர் உருக்கொண்டபடி யாம் என்றான் என்க. |