பக்கம் : 708
 

     (இ - ள்.) திருமேனி - இவள் திருமேனியோவெனில், செங்குவளை நாறும் -
செங்கழுநீர் மலரின் நறுமணம் கமழ்வதொன்றாயிருக்கும், செவ்வாயும் ஈர் இதழும் -
செவ்விய வாயும் இரண்டாகிய அதரங்களுமோவெனில், அக்குவளை ஆம்பலும் நாறும் -
அழகிய நீலோற்பல மலரின் நறுமணத்தையும் ஆம்பல் மலரின் நறுமணத்தையும் தம்பாற்
கமழப்பெறுவனவா யிருக்கும், இங்கு இவளை - இவ்விடத்தாளாகிய இச்சுயம்பிரபை
நல்லாளை, முன் படைத்த தேவன் - முன்னர் இத்தகையளாய்ப் படைத்த
இறைவனோவெனில், என் இன்னுயிரை - என் ஆருயிரை, பைங்குவளை மாலையாட்கு -
பசிய குவளைமலர் மாலையை அணிந்துள்ள இவட்கு, ஆளாய்ப் படைத்தானே -
கணவனாம் மாத்திரையே படைத்தொழிந்தான். ஏ - இரண்டும் ஆலும் அசைகள், (எ - று.)

இவள் மேனி குவளை நாறும், செவ்வாயும் இதழும் ஆம்பனாறும், இங்ஙனம் இவளைப்
படைத்தான், என்னை இவட்குக் கணவனாந்துணையே படைத்தான் என்றான் என்க. என்றது
என் மேனி முதலியன இவட்கேற்ப இயற்கை மணமுடையனவல்ல என்றவாறு.
 

( 289 )

 

1116.

அன்புருகு காமத்தீ மாட்டி யளியவென்
என்புருக வேவ விணைநெடுங்கட் பூம்பாவை
முன்பெருகு முந்நீ ரமுதாய் விளைத்தினிய
மின்பருகு நுண்ணிடையார் மெல்லுருவங்கொண்டதே.
 

     (இ - ள்.) இணைநெடுங்கண் பூம்பாவை - இணைந்த நெடிய கண்களையுடைய
தாமரைமலரின் மேலுறையும் திருமகள், அளிய என் - இரங்கத்தக்க என்னுடைய
நெஞ்சத்தே, அன்பு உருகு காமத்தீ முன்மாட்டி - அன்பு உருகுதற்குக் காரணமான காம
நெருப்பை முற்பட மூட்டி, என்புருக வேவ - யான் என் என்புகள் உருகும்படி
வேகாநிற்கும்பொழுது, பெருகு முந்நீர் அமுதாய் விளைத்து - பெருகாநின்ற பாற்கடல்
அமுதம்போன்று இன்பத்தை யுண்டாக்கும் பொருட்டு, இனிய மின் பருகும் நுண் இடையார்
- காண்டற்கினிய மின்னலையும் தனது ஒளியால் விழுங்குமியல்புடைய நுண்ணிய இடையை
உடைய இச்சுயம்பிரபையாரின், மெல்லுருவம் கொண்டது - மெல்லிய உருவத்தை
மேற்கொண்டதொரு செயல்போலும்,(எ - று.)
வேவ - வேகச்செய்தென்க. விளைத்து என்னும் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக.
முன் என்பதனை முன்மாட்டி என ஒட்டுக, பூம்பாவை - திருமகள். திருமகள் எனக்கு
இன்பம் விளைக்க இவர் உருக்கொண்டபடி யாம் என்றான் என்க.
 

( 290 )