(இ - ள்.) விஞ்சையர் உலகம் எல்லாம் வெய்துற - விச்சாதரருலகமெங்கும் அஞ்சும்படி, விரிந்த மாற்றம் - பரவிய இச்செய்தியை, எஞ்சல் இல் புகழினானுக்கு - குறைதலில்லாத புகழுடைய அச்சுவகண்டனுக்குக் கூற, அமைச்சு அரிமஞ்சு என்பான் - அமைச்சுத்தொழில் பூண்ட அரிமஞ்சு என்பவன், அஞ்சினன் - அஞ்சியவனாய், சின்னாள் மறைத்து - சிலநாள்வரை மறைத்து வைத்துப் பின்னர், வஞ்சனைச் சீயம் ஆய வார்கழலவனைக் கூவி - மாயச்சிங்கமாகிச் சென்றவனாகிய நீண்ட வீரக்கழலணிந்த அரிகேதுவை அழைத்து, இன்னணம் இசைப்பித்தான் - இவ்வாறு அச்சுவகண்டனுக்கு உரைக்கும்படி ஏவினான், (எ - று,) வார்கழலவன் - அரிகேது. புகழினான் - அச்சுவகண்டன். விச்சாதரர் உலகமெல்லாம் நடுங்குமாறு விரிந்த இச் செய்தியைச் சின்னாள் மறைத்துப் பின்னர், அரிமஞ்சு, அரிகேதுவைக் கூவி, இவ்வாறு கூறுவித்தான், என்க. |
(இ - ள்.) சொரி கதிர் வயிரப் பைம்பூண் அரசர்கள் பலரும் சூழ - வீசுகின்ற சுடரையுடைய வயிரத்தாலாய பசிய அணிகலன் அணிந்த பல மன்னர்களும் சூழ, எரிகதிர் ஆழியாள்வான் - சுடர்வீசும் ஆழிப்படையை ஆளுகின்ற அச்சுவகண்டன், இங்கு இனிதின் இருந்தபோழ்தில் - இவ்விடத்தே இனிதாகக் கொலுவீற்றிருந்ததோர் அமையத்தே, அரியது கேட்க என்ன - அரசர் பெருமான் கேட்டற்கரிய செய்தி ஒன்றை இப்போது யான் கூறக் கேட்டருள்க என்று கூறத் தொடங்கி, அரிகேது என்பான் - அரிகேது என்பவன், பட்டது பேசினான் - திவிட்டன் சிங்கத்தை வாய்பிளந்த செய்தியைக் கூறலானான், ஆங்கு - அவ்விடத்தே, பெரியதோர் வியப்புச் சென்றது - அவ்வவையில் மிகப் பெரியதொரு வியப்பு உண்டாகியது,(எ - று.) |