பக்கம் : 725
 
 
1143. அடுகுர லரச சீய மதனையோ ராம1பற் றாள்போல்
நொடிவரை யளவிற் கீறி நுனித்தது வியத்தல் 2செல்லாக்
கடிவரை யலங்கன் மார்பிற் காளையே பெரிய னென்று
தடவரை யனைய தோளான் றன்னுளே வியந்து நின்றான்.
 

     (இ - ள்.) குரல் அடு அரசசீயம் அதனை - தன் முழக்கத்தாலேயே பிற வுயிர்களைக்
கொல்லும் ஆற்றலுடைய அரச சிங்கத்தை, ஓர் ஆம்பற்றாள் போல் - ஓர் ஆம்பல்
மலரின் நாளத்தைப் பிளப்பதுபோல், நொடி வரையளவில் கீறி - ஒரு மாத்திரைப் போதில்
பிளந்து, நுனித்து - அழித்து, அது வியத்தல் செல்லா - மேலும் அவ்வருஞ் செயலை
வியத்தலும் செய்யாத, கடிவரை யலங்கல் மார்பன் - மணம் கமழும் மாலையணிந்த மலை
போன்ற மார்பையுடையவனாகிய, காளையே பெரியன் என்று - திவிட்டநம்பியே ஆற்றலால்
யாரினும் பெரியவனாவான் என்று, தன்னுளே வியந்து நின்றான் - தன் நெஞ்சினுள்ளே
வியப்படைந்து நின்றான், தடவரை அனைய தோளான் - பெரிய மலையை ஒத்த
தோள்களையுடைய அரிகேது, (எ - று.)

     நுனித்தல் - ஈண்டு அழித்தல் என்னும் பொருளின் மேனின்றது. இதனுள் அரிகேது
நகை கொண்டதற்கு ஏதுக் கூறப்படுகின்றது. தன் முழக்கத்தாலேயே பிறவுயிரை
மாய்க்கவல்ல அரிமாவை, ஆம்பல் நாளத்தைப் பிளக்கும் அத்துணை எளிமையிற் பிளந்த
நம்பியே, ஆற்றலில் யாரினும் பெரியன்; அச்சுவகண்டன் அறியாமையாற் சினந்தான்;
என்று, இவன் அறியாமையையும் நம்பியின் பெருந்தகைமையையும் வியந்தான், என்க.
 

( 13 )

அரிகேது தன்னுள் துணிதல்

1144. இன்றிவ னனலும் போழ்தி னெதிர்நின்று கனற்றி யென்னை
சென்ளறவ னாற்ற றானே கண்டபின் றேறு மன்றே
என்றுதன் மனத்தி னெண்ணி 3யியைந்தவா முகமன் சொல்லிக்
குன்றுடை யரசன் முன்னைக் கூப்பிய கைய னானான்.
 
     (இ - ள்.) இன்று - இப்போது, இவன் அனலும் போழ்தின் - இவ் வச்சுவகண்டன்
அறியாமையால் சினக்குங்கால், எதிர் நின்று கனற்றி என்னை - இவன் எதிரே நின்று
இவன் சொற்கு எதிர் மொழிந்து இவனை மேலும் வெகுள்விப்பதனால் பயன் என்னை,
அவன் ஆற்றல் - அத்திவிட்டனுடைய பேராற்றலை, தானே சென்று கண்டபின் - தானே
நேரில் அவன் முன்னர்ச் சென்று அறிந்த பின்னரேனும், தேறும் அன்றோ - தானே
தெளிந்து கொள்வான் அல்லனோ, என்று தன் மனத்தின் எண்ணி - என்று தன்
நெஞ்சினுள் நினைத்து, இயைந்தவா முகமன் சொல்லி - அப்பொழுது அவ்
வச்சுவகண்டனுக்குப் பொருந்துமாற்றானே முகமன் மொழிகளைப் பேசி, குன்றுடை அரசன்
முன்னை - மலை மன்னனாகிய அவ் வச்சுவகண்டனுக்கு முன்னர், கூப்பிய கையன்
ஆனான் - கைகூப்பித் தொழுவானாயினான், (எ - று.)
 

 


     (பாடம்) 1பொற்றாள். 2செய்யாக. 3யிருபுற.