(இ - ள்.) ஏவது செய்து வாழும் யாம் உளராக - ஏவிய செயலை இனிது செய்து வாழ்வேமாகிய யாம் உயிருடன் இருப்பேமாகவும், எங்கோ - எம்முடைய தலைவன், நோவது செய்த வேந்தர் - இன்னல் உறத்தக்க செயலை அஞ்சாது இயற்றிய பகை வேந்தர்கள், நுனித்து உயிர் வாழ்ப ஆயில் - வாழும் நெறிகளை ஆராய்ந்து இனிதின் உயிர் வாழ்தலையுடையர் ஆன பொழுது, அது சாவு - அவர் வாழும் அது நமக்குற்ற சாவே பிறிதில்லை, வாழ்க்கை போக - இத்தகைய இளிவரவுடைய நம் வாழ்க்கை இனி ஒழிக, நமக்கு இனி விளைவது - நமக்கு இனி உண்டாகற்பாலது, ஒன்று தவந்தலை நிற்றல் - ஒன்றில் வைத்து இவ்விழி பிறப்பறுமாறு தவநெறியினிற்றல், இன்றேல், ஒன்று வீவது செய்தல் - ஒருகூற்றில் வைத்து, இறத்தல், என்பார் - என்று தம்மைத்தாமே இகழ்வார்கள், (எ - று.) ஏவது: விகாரம்; ஏவுவது என்றவாறு. ஏவியவற்றைச் செய்து உயிர் வாழும் இயல்புடைய யாம் இருக்கும் போதே, எம் தலைவன் நோவது செய்தார் வாழ்தல், நமக்குற்ற சாவாம்; இவ் வாழ்க்கை வேண்டா! இனி நமக்கு ஒன்று சாதல் அன்றேல் தவம் புகல் இரண்டின் ஒன்று அமைவதாக என்றார் என்க. |