பக்கம் : 741 | | | 1168. | வாளினாற் செருவுண் டேனு மாயமற் றாகு மேனும் தோளினா லாகு மேனும் செல்லெலா மொழிக மற்றக் காளைதன் னுயிரி னோடுங் கன்னியைக் கொணர்ந்து தந்து தாளிலே யிட்ட பின்றைத் தவிர்கநின் சீற்ற மென்றான். | (இ - ள்.) வாளினால் செருவுண்டேனும் - வாட்படையினாலே ஆற்றும் போர் நிகழ்வதாயினும், மற்று மாயம் ஆகும் ஏனும் அஃதன்றி மாயத்தால் நிகழ்த்தும் போரே ஆகும் எனினும், தோளினால் ஆகுமேனும் - தோள் ஆற்றலாலே நிகழ்த்தும் போரே எனினும், சொல் எலாம் ஒழிக - அவைபற்றிப் பேசும் இவ்வீண் சொற்களை விடுக, மற்று அக்காளை தன் உயிரினோடும் - இனி அத்திவிட்டனுடைய உயிருடனே, கன்னியைக் கொணர்ந்து - சுயம்பிரபையையும் பற்றிக்கொண்டு வந்து, தாளிலே தந்து இட்ட பின்றை - உன் அடிகளிலே காணிக்கையாக வைத்த பின்னர், நின் சீற்றம் தவிர்க என்றான் - உன்னுடைய வெகுளி ஒழிக என்று இயம்பினான், (எ - று.) மற்றெலாம் ஒழிக, காளையின் உயிரையும், கன்னியையும் உன் திருவடியிலே யான் கொணர்ந்து இட்டபின்னர், உன் சீற்றம் விடுக என்றான், என்க. | ( 38 ) | | 1169. | ஆளிகட் கரசன் 1பாங்கோர் குறுநரி யறிவில் 2லாது மீளிமை பொறாது வெம்பி வெகுண்டெழு கின்ற தென்றால் நாளினு நங்கள் போல்வார் நகைசெயப் படவ தன்றே வாளொளி வயிர மின்னு மணிமுடி மன்னர் கோவே. | (இ - ள்.) வாள் ஒளி வயிரம் மின்னும் மணிமுடி மன்னர் கோவே - வாட்படையையும், சுடருடைய வயிரமணிகள் மின்னுகின்ற முடிக்கலனையும் உடைய அரசர்க்கரசனே, ஆளிகட்கு அரசன் பாங்கு - அரிமாக்களுக்கு அரசனாகிய ஓர் அரி ஏற்றின் முன்னர், ஓர் குறுநரி - ஓர் எளிய குள்ளநரி, அறிவில்லாது - அறிவில்லாமலும், மீளிமைபொறாது - அவ்வரியேற்றின் தலைமையைப் பொறாமலும், வெம்பி - பகைகொண்டு மனம் வெம்பி, வெகுண்டு எழுகின்றது - சினந்து போர்செய்ய எழுந்தது என்றால், நங்கள் போல்வார் - நம்மை ஒத்த வீரர்களால், நாளினும் - எப்பொழுதும், நகை செய்யப்படுவதன்றோ, அப்பேதைமைச் செயல் நகைக்கப்படுவதொன்றன்றோ, (எ - று.) அரியேற்றின் முன்னர், குறுநரி இகல்கொண்டு பொருதற் கெழுவது நகைவிளைக்குமன்றே! அதுபோல, மனிதன் நின்னைப் பகைத்தலும் நகை தருகின்றது, என்றான் என்க. | ( 39 ) |
| (பாடம்) 1 னாங்கோர். 2 லாதா. | | |
|
|