பக்கம் : 742
 

கனக சித்திரன் கெழுவேம் எனல்

1170. ஆதலா லெங்க ளாலங் காவதொன் றில்லை யாயிற்
போதுலா மலங்கன் மார்ப பொருவது பொருந்திற் 1றென்னுங்
காதலான் கனக சித்திரன் கட்டுரை யதனைக் கேட்டே
கோதிலா மாரி பெய்த கோடையங் குன்ற மொத்தான்.
 

     (இ - ள்.) போது உலாம் அலங்கல் மார்ப - மலர்கள் பொருந்திய மாலையையுடைய
வேந்தே!, ஆதலால் - அவ்வாறாதலால், ஆயில் - ஆராயுமிடத்தே, எங்களால் ஆவது -
எம்மனோரால் ஆகற்பாலது, ஒன்று இல்லை - பிறிதொன்றுமில்லை, பொருவது
பொருந்திற்று - போர்செய்தலே இப்பொழுது தக்கதாயிற்று, என்னும் - என்று கூறிய,
காதலான் கனகசித்திரன் - மகனாகிய கனகசித்திரன் என்பானுடைய, கட்டுரையதனைக்
கேட்டே - பொருன் பொருந்திய மொழிகளைக் கேட்டு, கோது இலா மாரி பெய்த -
குற்றமில்லாத மழைபொழியப்பட்ட, கோடை அம்குன்றம் ஒத்தான் - கோடைக்காலத்து
மலையை ஒத்தவன் ஆனான், (எ - று.)

ஞாயிற்றின் வெப்பத்தாலே கொதித்து நின்ற குன்றம், பெரிய மழை பெய்தலாலே
குளிர்ந்தாற் போன்று, திவிட்டன் பகையாலே கொதித்த அச்சுவ கண்டன், கனகசித்திரன்
சொன்மாரியாலே சினந்தணிந்து மனங்குளிர்ந்தான்; என்பதாம்.
 

( 40 )

வச்சிரகண்டனின் மறவுரை

1171. மற்றவ னுரைத்த போழ்தின் வச்சிர கண்ட னென்பான்
கொற்றவற் கிளைய காளை 2கோற்றொழிற் பாகம் பூண்டான்
இற்றதா லெங்க ளாண்மை யாங்களு 3மிழிந்து நிற்பச்
செற்றதோர் படையுண் டாயிற் றென்றுகண் சிவந்திட் டானே.
 
     (இ - ள்.) மற்று அவன் உரைத்த போழ்தின் - கனகசித்திரன் இவ்வாறு கூறியவுடன்,
கொற்றவற்கு இளைய காளை - அச்சுவகண்டன் தம்பியாகிய காளைபோன்றவனும்,
கோல்தொழில் பாகம் பூண்டான் - செங்கோல் தொழிலாகிய அரசியலில் பாதியை
மேற்கொண்டு நடத்துபவனுமாகிய, வச்சிரகண்டன் என்பான் - வச்சிரகண்டன் என்னும்
பெயரையுடையவன் எங்கள் ஆண்மை இற்றதால் - எம்முடைய மறத்தன்மை
அழிந்தொழிந்தது போலும், யாங்களும் இழிந்து நிற்ப - யாங்களும் இளிவரவுடையராய்
நிற்கும்படி, செற்றதோர் படையுண்டாயிற்று - எம்பால் இகல்கொண்டதொரு படையும்
உளதாயிற்றோ, என்று - என்று கூறி கண்சிவந்திட்டானே - வெகுண்டு கண்கள் சிவந்தான்,
ஏ : அசை, (எ - று.)
 

     (பாடம்) 1 றென்று. 2 கோத் தொழில். 3 மிழித்து.