பக்கம் : 755
 

     பரிய உடலுடனே அசுரராய்ப் பிறந்த வீரமற்றோர் அச்சுவகண்டனுக்கு
அஞ்சினராதலின், அவரோடே நம்மையும் எளியராய்க் கருதுகின்றான் போலும் என்றார்
என்க. அச்சுவகண்டன் செருக்கிற்குக் காரணம் பரிய உடலிருந்தும் ஓடிய வீரமற்ற அசுரரே
ஆவர், பரிய உடலுடையார் தனக்குடைந்தமையால் சிற்றுடல் படைத்த நம்மை
நம்மறமறியாது அச்சுவகண்டன் இகழ்கின்றான் என்றபடி.
 

( 60 )

 
1191. எரிபொங்க வெழந்த வெள்ளை
     யெயிற்றிடை யிலங்க நக்குப்
புருவங்க ணெரிய வேற்றிப்
     புகுந்துநாம் வெருட்டும் போழ்தி
லுருவங்கள் பெரிய வாறு
     முள்ளங்கள் சிறிய வாறுஞ்
செருவங்கண் விளைந்த போழ்திற்
     காட்டுதுந் தெருட்டி யென்பார்.
 
     (இ - ள்.) எழுந்த வெள்ளை யெயிற்றிடை இலங்க நக்கு - முளைத்து எழுந்த
வெண்மையான பற்களினிடையே விளங்கச் சிரித்து, எரிபொங்க - சினத்தீ மிக, புருவங்கள்
நெரிய வேற்றி புருவங்கள் வளையும்படி நெற்றியின்மேல் ஏற்றி, புகுந்துதாம் - போரின்கட்
புகுந்து, வெருட்டும் போழ்தில் - அச்சுறுத்தும் காலத்தே, உருவங்கள் பெரியவாறும் -
உடல் பருத்தமையால் உண்டாகிய பயனும், உள்ளங்கள் சிறியவாறும் - நெஞ்சங்கள்
சிறுத்தமையால் உண்டாய பயனும், அங்கண் செரு விளைந்த போழ்தில் - அவ்விடத்தே
போராற்றும் அமயத்தே, தெருட்டிக் காட்டுதும் என்பார் - அவர் நன்கு உணருமாறு
விளக்கிக் காட்டுவோம் என்று கூறுவார், (எ - று.)

உடல் பெரியாரைப் பெரியரென்றும், சிறியாரைச் சிறியரென்றும். அறியாமையால் மதித்து,
உடல் சிறியராய் நம்மைப் போர்க்களத்தே அவர் அச்சுறுத்தும் போது, உடல் சிறியரேனும்
உளத்தால் யாம் அவரினும் பெரியராதலைத் தெருட்டிக் காட்டுதும் என்றார் என்க.
 

( 61 )