பக்கம் : 780
 

     (இ - ள்.) படிமேலன - நிலத்தின்கண் வந்தனவாகிய, பாய்பரி - விரைந்து பாய்கின்ற
குதிரைகள், கொடிமேல் உடை யானைகள் கும்பம் உதைத்து - பிடர்மேலே
கொடிகளையுடைய யானைகளின் மத்தகமுடியை உதைத்துருட்டி, அடிமேலனவாக எழுந்து -
தம் கால்கள் விசும்பிடத்தன வாகும்படி மேலே பாய்ந்தெழுந்து, அரசர் முடிமேலனவா -
மன்னர்களின் தலையணிகலன்களின் மேலனவாகவும், முகில் மேலனவாய் - மேகங்களின்
மேலனவாகவும், வாயின - தாவின, (எ - று.)

ஆயின எனினுமாம்.

புரவிகள் யானையின் மத்தகத்தே உதைத்தெழுந்து, மன்னர்முடி மேலும், முகில்மேலும் தாவி
ஓடின என்க.
 

( 105 )

 

1236. ஒருபான் முடிமே லுருளா ழியுதைத்
திருபா லுமெழுந் தெறிபா றுசெலப்
பொருபா லவர்கண் சுழலப் பொருதேர்
வருபா லறியா மைமயங் கினவே.
 
     (இ - ள்.) ஒருபால் - ஒரு பக்கத்தே, பொருதேர் - போர் ஆற்றும் தேர்ப்படைகள்,
முடிமேல் உருளாழி - மாண்டு வீழ்ந்தோர்தம் தலைகளின் மேலே உருள்கின்ற தம்
சக்கரங்கள், உதைத்து - உதைத்தலானே, எறிபாறு - ஊன் எறிதலையுடைய பருந்துகள்,
எழுந்து இருபாலும் செல - எழுந்து இரு புறங்களினும் பறந்து போகா நிற்பவும், பொரு
பாலவர் கண்சுழல - போர் புரிகின்ற மறவர்களுடைய கண்கள் (செல்ல இடம் பெறாமே)
சினத்தாற் சுழலா நிற்பவும், வருபால் அறியாமை - வரும் வழியறியாமல், மயங்கின -
மயங்குவனவாயின.

ஒருசார் தேர்கள் முடிகளின் மேலே உருளப் பருந்துகள் பறந்து போகா நிற்பச் செல்வழி
யறியாதே மயங்கின, என்க.

உடையார் மயக்கம் உடைமைமேலேற்றிக் கூறப்பட்டது.
 

( 106 )

யானைப்போர்

1237. நெறியார் நிரைமா வொடுதேர் களெடுத்
தெறியா வுதையா நுதலே றுகரம்
பறியா முறியாப் படையோர் படையுட்
செறியா மதயா னைதிரிந் தனவே.