பக்கம் : 785
 

     அருக்ககீர்த்தியின் ஒரு கை இடையறாது தூணியிற் காணப்பட்டது, மற்றொரு கையில்
வில் தோன்றிற்று, வில் வட்டமாகவே காணப்பட்டது, அம்புகளே காணப்படும்
அளவினவல்ல, மிக்கன என்க.
 

( 114 )

 

1245. ஒன்றுதொ டுத்ததொ ராயிர மாம்பல
வென்றுதொ டுத்தன வெண்ணில வாஞ்சரம்
அன்றுதொ டுத்தவ னெய்தன வையகம்
நின்றுதொ டுத்துநி ரந்தன வன்றே.
 
     (இ - ள்.) தொடுத்தது சரம் ஒன்று ஒராயிரம் ஆம் - தொடுக்கப்பட்ட ஒருகணையே
செல்லும்போது ஓராயிரம் அம்புகளாகிச் செல்லும், பலவென்று தொடுத்தன சரம்
எண்ணிலவாம் - இனி ஒரே தொடையிற் பலவாகத் தொடுக்கப்பட்ட கணைகளோ வெனில்
அவை செல்லுங்கால் எண்ணிறந்தனவாகும், அன்று அவன் தொடுத்து எய்தன -
அற்றைப்போரில் அவ்வருக்ககீர்த்தியால் இவ்வாறு தொடுத்து எய்யப்பட்ட கணைகள்,
வையகம் தொடுத்து நின்று நிரந்தன அன்றே - இவ்வுலக முழுதும் தொடர்ந்து நின்று
பரவலாயின, அன்றே : அசை (எ - று.)

தொடுக்கும்பொழுது ஒன்றாயிருந்த கணை விடுக்கும்போது ஆயிரமாம், தொடுக்கும்போது
பலவாகிய கணைகள் விடுக்கும்போது எண்ணிலவாம், அன்று அருக்ககீர்த்தி தொடுத்த
அம்புகள் உலகமுழுதும் பரவின என்க.
 

( 115 )

 

1246. விண்மிசை யேறிய வெஞ்சரம் விஞ்சையர்
கண்மிசை 1யேறலு மேகடி தேதிசை
யெண்மிசை யின்றியி ருண்டன வோவென
மண்மிசை வீழ்ந்தும யங்கின ரன்றே.
 
     (இ - ள்.) விண்மிசை யேறிய வெஞ்சரம் - வில்லினின்றும் விடப்பட்டு விசும்பிற்
பாய்ந்த வெவ்விய அம்புகள்’ விஞ்சையர் கண்மிசை யேறலும் - விச்சாதரருடைய
கண்களிலே ஊடுருவிப் பாய்ந்தவுடனே, கடிதே - விரைந்து, திசை எண் மிசையின்றி
இருண்டனவோ - திக்குகள் கருதற்கு இயலாதபடி இருண்டுபோயினவோ என்று, மண்மிசை
வீழ்ந்து - நிலத்தின் மேல் விழுந்து, மயங்கினர் அன்றே - தமக்கு யாது நேர்ந்ததென
அறியாதவராய் மயங்கினார்கள், அன்றே : அசை. (எ - று.)

எண்மிசை - நினைப்பின்மேல்.

அருக்ககீர்த்தியின் கணைகள் கண்களில் ஊடுருவ உருண்டவர். தம் கண்ணில்
கணையேறியதறியாராய், திசைகள் இருண்டன என்று கருதி நிலத்தில் வீழ்ந்து மயங்கினர்
என்க.
 

( 116 )


     (பாடம்) 1 யேறின - யொன்றின்.