பக்கம் : 786
 

பகைவர் நிலை

1247. இருள்பா யினவா லிதுவென் னெனவே
மருள்வார் வெருள்வார் மறைவார் மறிவார்
தெருள்வார் திரிவார் செருவார் 1கணையா
லுருள்வார் களுமா கியுடைந் தனரே.
 
     (இ - ள்.) இருள் பாயினவால் இது என் எனவே மருள்வார் - இப்பகற்போதின்
கண்ணே இருள் பரவியுளது இதற்குக் காரணம் யாது என்றியம்பி வியப்பாருமாய்,
வெருள்வார் - அஞ்சுவாருமாய், மறைவார் - ஓடி ஒளிவாருமாய், மறிவார் மீள்வாருமாய்,
தெருள்வார் - இந்நிலை அருக்ககீர்த்தியின் விற்போரான் ஆயிற்று என உணர்வாருமாய்,
திரிவார் - குறிக்கோளின்றித் திரிவாருமாய், செருவார் கணையால் -
போர்த்தொழிலுக்கியன்ற அம்புகளால் ஏறுண்டு, உருள்வார்களுமாகி - நிலத்தே கிடந்து
புரள்வாரும் ஆகி, உடைந்தனரே - அருக்ககீர்த்தியைச் சூழ்ந்த அச்சுவகண்டனுடைய
மறவர்கள் ஆற்றாதே ஓடினர்.
அருக்ககீர்த்தியின் கணையாலே உலகம் இருண்டுவிட்டமையால் மருள்வாரும்
வெருள்வாரும், மறைவாரும், மீள்வாரும், தெருள்வாரும், கணையேறுண்டு உருள்வாரும்
ஆயினர் என்க.
 

( 117 )

 

1248. உடைந்திடு படையிடை யொலிகொண் மால்வரை
யிடைந்திடும் படியெழுந் திடறி யேகினார்
படந்தொடி னுடன்றெழு 2பணிகள் போற்பகை
கடைந்திடுங் கடுந்திறற் கால வீரரே.
 
     (இ - ள்.) படம் தொடின் உடன்று எழு பணிகள்போல - தமது பணத்தைத் தீண்டிய
உடனே சீறி எழுகின்ற பாம்புகளைப்போன்று, பகை கடைந்திடும் கடுந்திறல் காலவீரரே -
சினந்தெழுந்து பகைவர்களைக் கலக்கி ஒழிக்கும் கடிய ஆற்றலுடைய காலனை ஒத்த
மறவர்கள், மால்வரை இடைந்திடும்படி - பெரிய மலைகள் பின்னிட்டுப்
புடைபெயர்ந்தாற்போன்று, உடைந்திடும் ஒலிகொள் படையிடை - ஆற்றலழிந்து திரும்பிய
முழக்கமிக்க தம் படைகளிடையினின்றும், எழுந்து இடறி ஏகினார் - புறப்பட்டுப்
பிணங்களை இடறிக்கொண்டு ஓடுவாராயினர், (எ - று.)

படத்தைத் தொட்டவுடன் சீறியெழும் பாம்புபோன்றவரும், காலனை ஒத்தவருமாகிய சிறந்த
வீரரெல்லாம், அருக்ககீர்த்திக்கு ஆற்றாது பிணங்களை இடறி ஓடினர், என்க.
 

( 118 )


     (பாடம்) 1 சிலையரல். 2 மரவு.