பக்கம் : 795
 

     வயிரக்கண்டன் அந்தோ! மானிடர் இதுகாறும் மகளிரோடே ‘கண்டு
கேட்டுண்டுயிர்த்துற்று“ இனிதாக வாழ்ந்தனரே! இப்போது, நம் கணையோடே களத்திலே
உருளப் போகும் காலம் அவர்க்கு வந்துவிட்டதே என்றான் என்க.
 

( 133 )

சுகண்டன் மறவுரை

1264. ஒத்திலங் கொண்சிறை யுவணன் றன்னொடு
பைத்திலங் கரவுகள் 1பகைப்ப போன்மெனக்
கைத்தலங் கையொடு புடைத்து நக்கனன்
தொத்திலங் கலங்கலான் சுகண்ட னென்பவே.
 
     (இ - ள்.) தொத்து இலங்கு அலங்கலான் சுகண்டன் - பூங்கொத்துகள் திகழும்
மலர்மாலை அணிந்த மற்றொரு தம்பியாகிய சுகண்டன் என்பான், ஒத்து இலங்கு ஓண்சிறை
உவணன் தன்னொடு - வரிசையின் ஒத்துத் திகழ்தலையுடைய ஒளிபொருந்திய சிறகமைந்த
கருடனுடனே, பைத்து இலங்கு அரவுகள் பகைப்ப போன்ம் என - படமெடுத்துத் திகழும்
பாம்புகள் அஞ்சாதே பகைத்தல் போலும் இம்மானிடப் பேதைகள் நம்மைப் பகைத்தல்
என்று கூறி, கைத்தலம் கையொடு புடைத்து நக்கனன் - கையோடு கைதட்டிச் சிரித்தான்,
(எ - று.)
போன்ம் - பொலும்.
சுகண்டன், கருடனோடே பாம்புகள் பகைப்பது போல, பேதை மானிடர் நம்மொடு
பகைத்தனர் என்று சொல்லிச் சிரித்தான் என்க.
 

( 134 )

தம்பியரின் மறவுரை கேட்டு அச்சுவகண்டன்
மகிழ்தல்

1265. தம்பியர் மொழியெனுந் தயங்கு மாரியால்
வெம்பிய கொடுமனங் குளிர்ந்து வெய்யவன்
நம்பெயர் முனிந்தவர் 2நயந்த மண்மிசை
நும்பெயர் நிறுத்துமி னென்று நோக்கினான்.
     (இ - ள்.) வெய்யவன் - கொடியவனாகிய அச்சுவகண்டன், தம்பியர் மொழியெனும்
தயங்கும் மாரியால் - தன் தம்பிமாருடைய சொற்கள் என்னும் விளக்கமுடைய மழை
பெய்தலாலே, வெம்பிய கொடுமனம் குளிர்ந்து - முன்னர் வெப்பமுடைத்தாயிருந்த கொடிய
நெஞ்சு குளிரப்பெற்று, நம்பெயர் முனிந்தவர் நயந்த மண்மிசை - நமது பெயரையே
வெறுத்தவராகிய சடியரசன் முதலியோர் விரும்புதற்குக் காரணமான பூமியின் மேலே, நும்
பெயர் நிறுத்துமின் என்று நோக்கினான் - நுங்களுடைய புகழை நிலைநிற்கச்
செய்யுங்கோள் என்று விரும்பி நோக்கலானான், (எ - று.)
 

 


     (பாடம்) 1 பதைப்ப. 2நயந்து.