பக்கம் : 796 | | இவ்வாறு கூறிய தம்பியரின் வீரமொழியாலே, ஆறுதலடைந்த அச்சுவகண்டன், தம்பியர்காள் ! நீவிர் மண்மிசை நம் பகைவரை வென்று, உங்கள் பெயரை நிலைநிறுத்துங்கோள் என்றான் என்க. | ( 135 ) | விச்சாதரர் படை ஒருங்கெழுந்து போர் செய்தல் | 1266. | நஞ்சினை நஞ்சுசென் றெரிக்க லுற்றபோல் விஞ்சையர் வெஞ்சினம் பெருக்கி மேல்வர வஞ்சமின் மணியொளி வண்ணன் றானையு மெஞ்சலின் றெழுந்தெதி ரூன்றி யேற்றதே. | (இ - ள்.) விஞ்சையர் வெஞ்சினம் பெருக்கி - விச்சாதரர்கள் வெவ்விய வெகுளியை வளர்த்துக்கொண்டு, நஞ்சினை நஞ்சு சென்று எரிக்கலுற்றபோல் - ஒரு நஞ்சினை மற்றொரு நஞ்சு பகைத்துச் சுட்டொழிக்கச் செல்வதுபோல, மேல்வர - போர் மேற்கொண்டு வராநிற்ப, வஞ்சம் இல் மணிஒளி வண்ணன் தானையும் - வஞ்சகமில்லாத திவிட்ட நம்பியினுடைய படையும், எஞ்சல் இன்று எழுந்து - குறைவின்றி எழுந்து, எதிர் ஊன்றி ஏற்றதே - விச்சாதரர் படைக்கு எதிர் சென்று தடுத்துப் போர் செய்யத் தொடங்கியது, ஏ : அசை, (எ - று.) விச்சாதரர் சினமிக்கு ஒரு நஞ்சினை மற்றொரு நஞ்சு பகைத்து வருமாப்போல வர, நம்பிபடையும் சென்று எதிர்த்த தென்க. | ( 136 ) | | 1267. | விண்ணின தளவுமேல் வந்த வேற்படை மண்ணின தளவுமா றேற்ற வாட்படை கண்ணிய கடற்படை யிரண்டு தம்மையு மெண்ணினி நமக்கெளி தாவ தில்லையே. | (இ - ள்.) மேல்வந்த வேற்படை - போர் மேற்கொண்டு வந்த விச்சாதரருடைய வேலேந்திய படை, விண்ணினது அளவு - விசும்பு எத்துணை விரிவுடைத்து அத்துணை விரிபுடையதாம், மாறு ஏற்ற வாள் படை - அப்படைக்கு எதிரூன்றிய மானிட வாள்வீரர் படை, மண்ணினது அளவு - இம்மண்ணுலகம் எத்துணைப் பரப்புடைத்து அத்துணைப் பரப்புடையதாம், கண்ணிய கடற்படை இரண்டு தம்மையும் - கருதப்பட்ட கடல்போன்ற இவ்விரு படைகளையும், எண் இனி நமக்கு எளிதாவது இல்லை - இவ்வாறு கூறுவதன்றி எண்ணல் அளவையுட் படுத்துக் கூறல் எமக்கு இனி எளிய செயலாகத் தோற்றிற்றில்லை, (எ - று.) அச்சுவகண்டன் படை விசும்பினளவிற்றென்றும், திவிட்டன் படை மண்ணுலகின் அளவிற்றென்றும், கூறுதலின்றி அவற்றின் பெருக்கத்தை அளவைகளாற் கூறவியலாதென்றபடி. | ( 137 ) | | |
|
|