பக்கம் : 798
 

நால்வகைப் படையுள் தனித்தனி ஒவ்வொரு படையைக் கண்டோர், தாம் கண்ட படையே
ஏனையவற்றினும் பெரிதென்னும்படி இருந்தன அப்படை என்க.

( 139 )

 

1270. கைவலப் படையினர் கழலர் கச்சையர்
செவ்வலர்க் கண்ணியர் செங்க 1ணாடவ
ரிவ்வுல கிவர்க்கிட மில்லை முன்னிவர்
ரெவ்வுல குடையவ ரென்னத் தோன்றினார்.
 
     (இ - ள்) கைவலப் படையினர் - கையிடத்தே வலிய போர்க் கருவிகளையுடையாரும்,
கழலர் - வீரக்கழல் யாத்தவரும், கச்சையர் - கச்சைகட்டியவரும், செவ்வலர்க் கண்ணியர் -
செவ்விய மலரானாய முடிமாலையை அணிந்தவரும், செங்கண் ஆடவர் - சிவந்த
கண்களையுடைய ஆடவரும் ஆகிய, இவர்க்கு - இம்மறவர்க்கு, இவ்வுலகு - இப்பேருலகம்,
இடமில்லை - இடம் போதாதாயிற்று, முன் - இதற்கு முன்பெல்லாம், இவர் -
இம்மறவர்கள், எவ்வுலகுடையவர் என்னத் தோன்றினர் - எவ்வெவ்வுலகங்களை வாழிடமாக
உடையரோ அறியோம் என்னும்படி காணப்பட்டனர், (எ - று.)

செவ்வலர் - சிவந்த மலர் : செவ்விதின் அலர்ந்த தும்பைமலர் எனினுமாம்.
அப்படையிலுள்ள மறவர் நிற்றற்கும் இவ்வுலகம் போதாதாயிற்று; ஆயின், இதற்கு முன்னர்
இவர் எவ்வெவ் வுலகிடை வாழ்ந்தனரோ! என்று எண்ணும்படி போர்மறவர் மிகுத்துத்
தோன்றினர், என்க.
 

( 140 )

 

1271. அன்றுபோர் மலைந்தது தானை யாயிடைச்
சென்றுபோர் படுமிடந் திசைக ளின்மையா
னின்றுபோ ராடவர் நேரொப் பார்களோ
டொன்றுபோ ருலகினை யூழி யொத்ததே.
 
     (இ - ள்) அன்று போர் மலைந்தது தானை - அற்றை நாள் போர்த் தொழில்
ஆற்றியது படை, ஆயிடை - அப்பொழுது, திசைகள் சென்று போர்படும் இடம்
இன்மையால் - திக்குகள் அப்படை பரவி நின்று போர் ஆற்றற்குப் போதிய
இடமுடையவல்லவாயின ஆதலால், நின்று போர் ஆடவர் நேர் ஒப்பார்களோடு
ஒன்றுபோர் - உறுதியுடன் நின்று, போர் மறவர்கள் தம்மொடு ஆற்றலாற் சமமாகி ஒத்த
பகைவரோடே பொருதும் போர், உலகினை ஊழி ஒத்தது - உலகினை விழுங்கி
அழித்தலைச் செய்கின்ற ஊழிக்காலத்தை ஒத்திருந்தது, (எ - று.)

அப்போர் மறவர் உலகம் இடமில்லையாம்படி பரவியதனால், அழித்தலைச் செய்யும் போர்
ஊழியை ஒத்தது என்க.
 

( 141 )

 

1272. பேரினும் பெருகிய சின்னந் தன்னினுந்
தாரினு மாறுமா றெறிந்து தம்முளே
தேரினுந் தேரினுந் திளைக்கின் றார்சிலர்
காரினும் பெரிதவர் கணைபெய் மாரியே.
 
     (இ - ள்.) பேரினும் - புகழின்மேலும்,பெருகிய சின்னந் தன்னிலும் - மிக்க
அடையாளங்களின் மேலும், தாரினும் - மாலைகளின் மேலும், மாறுமாறு எறிந்து - எதிர்
எதிர் படைகளை வீசி, தம்முளே - தங்களுக்குள்ளே, தேரினும் தேரினும் திளைக்கின்றார்
சிலர் - தேர்களைத் தேர்களின் எதிர் நிறுத்திப் போர் செய்வர் சில தேர் மறவர், அவர்
பெய் கணைமாரி - அம்மறவர்கள் பொழிகின்ற கணைமழை, காரினும் பெரிது - முகில்
பெய் மழையினும் மிக்கது, (எ - று.)

 


     (பாடம்) 1 ணாடையர்.