பகைவர்கள் கலங்குதற்குக் காரணமாகிய; கடல்அம் தானை இறைமகன் குறிப்பு நோக்கி - கடல்போற் பரந்த அழகிய படையையுடைய அரசனது மனக்குறிப்பைப் பார்த்து; தாமரைச் செங்கண் தம்மால் பணித்த - அவனுடைய தாமரை மலர்போலுஞ் சிவந்த கண்களாற் காட்டப்பெற்ற; தானத்தர் ஆனார் - இடங்களிலே அமர்ந்தார்கள். (எ - று.) நூல் - பூணூல்; பூ - பொலிவு, பூமருநூல், புரிந்தநூல், நுண்ணூல் எனத் தனித்தனி கூட்டுக. வேள்வியாசிரியன் அமைச்சர் ஆகியோர் அரசனாற் குறிப்பிடப்பட்ட இடங்களில் அமர்ந்தார்கள். மந்திரக் கிழவர் - மறைமுகமாகக் கலந்தெண்ணுதற்கு உரியவர்களாகிய அமைச்சர்கள். மன்னார் - தம்மொடு பொருந்தாதவர்; எனவே பகைவர் என்பது பெறப்பட்டது. கணணினாற் சொல்வது அரசர்கள் மாண்பு. ஆதலால்; “செங்கண் தம்மால் பணித்த தானத்தரானார்“ என்றார். |
( 27 ) |
சிற்றரசர்கள் தங்கட்குரிய இடங்களில் அமர்தல் |
97. | முன்னவ ரிருந்த பின்னை மூரிநீ ருலகங் காக்கும் மன்னவன் கழலைத் தங்கண் மணிமுடி நுதியிற் றீட்டிப் பின்னவன் பணித்த தானம் பெறுமுறை வகையிற் சேர்ந்தார் மின்னிவர் கடகப் பைம்பூண் வென்றிவேல் வேந்த ரெல்லாம். |
(இ - ள்.) முன்னவர் இருந்த பின்னை - முற்கூறப்பட்டவாறு வேள்வி யாசிரியனும் அமைச்சர்களும் அமர்ந்த பிற்பாடு; மின் இவர் கடகம் பைம்பூண் - மின்னொளியைப் போலும் ஒளி வீசுகின்ற கடகம் என்னும் கைவளையையும் மற்றும் பலவகையான பசியபொன்னணிகளையும் பூண்டுள்ள; வென்றி வேல் வேந்தர் எல்லாம் - வெற்றி பொருந்திய வேலையேந்திய அரசர்கள் அனைவரும்; மூரிநீர் உலகம் காக்கும் - பெருமை பொருந்திய கடலாற் சூழப்பெற்ற உலகினைப் புரக்கும்; மன்னவன் கழலை - பயாபதி அரசனது அடிகளில் அணிந்துள்ள வீரக் கழல்களை; தங்கள் மணிமுடி நுதியில் தீட்டி - தங்கள் மணிகள் பதிக்கப்பெற்ற முடியின் முனையிலேபடச் செய்து வணங்கி; பின் - பிறகு; அவன் பணித்ததானம் - அரசன் குறிப்பாற் காட்டிய இடங்களில்; பெறும்முறை வகையின் சேர்ந்தார் - பெறுகின்ற முறைமையின் வரிசையின்படி அடைந்தார்கள். (எ - று.) |