பக்கம் : 802
 

     (இ - ள்.) இன்னவர் இன்னுழி இன்ன செய்ப என்று - இம்மறவர் இவ்விடத்தே
இவ்வாறு போராற்றுவர் என்று, என்னவர் அறிவும் அங்கு இடைபுகாவகை - எத்திறத்து
அறிஞர் அறிவும் ஊடேசென்றுணர வியலாவாறு, மின்அவிர் எஃகினும் - ஒளிவிளங்கும்
வேலானும், மிடைந்த வாளினும் - நெருங்கிய வாளானும், மன்னவர் செருத்தொழில் -
அரசர் ஆற்றும் போர்த்தொழில், மயங்கியிட்டவே - பொருந்தின, (எ - று.)

அப்போர்க்களத்தே நின்று போர் ஆற்றுவோர், இன்னின்னவாறு, போராற்றினர் என்று
எத்திறத்தறிஞரும் உணரமுடியாதவாறு, போர்க் கருவிகளாலே விரைந்து போர்
செய்யலாயினர் அரசர்கள் என்க.
 

( 148 )

 

1279. அச்சமுடை யாரகல்க வாற்றுபவ ரேற்க
வெச்சமில் குடித்தலைவர் போகவென வெங்குங்
கச்சையர் கருங்கழலர் காலனையு நோனார்
வெச்சென விழித்துவிறல் வீரர்திரி கின்றார்.
 
     (இ - ள்.) அச்சம் உடையார் அகல்க - போர்த் தொழிலை அஞ்சும்
ஆண்மையில்லோர் அகல்வீராக, ஆற்றுபவர் ஏற்க - எம்மொடு அஞ்சாது நின்று
போராற்றவல்லுநர் போர் ஏற்று ஆற்றுவீராக, எச்சமில் குடித் தலைவர் போக -
பொன்போற் புதல்வரைப் பெறாதீரும் போகக் கடவீர், என - என்று கூறி, எங்கும் -
அக்களம் எங்கும், கச்சையர் - கச்சணிந்தவரும், கருங்கழலர் - கரிய வீரக்கழல்
கட்டியவரும், காலனையும் நோனார் - கூற்றுடன்று மேல்வரினும் பொறாது சினக்கும்
மறத்தன்மையுடையாரும் ஆகிய, விறல்வீரர் - ஆற்றல்மிக்க மறவர்கள், வெச்சென விழித்து
- வெய்தின் விழித்து, திரிகின்றார் - திரியலானார்கள், (எ - று.)

வெச்சென விழித்தல் - கண்ணோட்டமின்றிச் சினந்து அஞ்சும்படி பார்த்தல். போர்
செய்தற்கு அஞ்சுபவர் ஓடிவிடுக: அஞ்சாதவர் மட்டுமே நின்று எம்மோடுபோராற்றுக :
புதல்வர்ப் பேறில்லாதவரும் போக, என்றுகூறி, மறலியையும் அஞ்சாத மறவர்கள்,
கண்டோர் துணுக்குற்று அஞ்சும்படி விழித்துப் போர்க்கள மெங்கும் திரிவாராயினர் என்க.

 

( 149 )

மறவர் ஒழுக்கம்

1280. ஏற்றவ ரிமைப்பினு மிகழ்ந்தெறி தல்1செய்யார்
தோற்றவர் 2புறக்கெடையு நாணிமிக நோக்கார்
வேற்றவரை 3வீரநெறி காண்மினிது வென்று
தேற்றுவனர் போலவுணர் சென்றுதிரி கின்றார்.
    

 


     (பாடம்)1செல்லார். 2 புறக்கிடை தொலைந்தவரை நோக்கார். 3 வீரனெறி.