பக்கம் : 812
 

 

  பரிசேரணி யுயர்1 தேர்பல மதயானையு மெறியாத்
திரிசாரிகை 2நிகராயெவர் திறலாரென வினவும்.
 
     இச்செய்யுள் தொடங்கி (1295 - 1306) பன்னிரண்டு செய்யுள்கள் சில ஏட்டுப்படியில்
காணப்படவில்லை என்ப.)

     (இ - ள்) அரிசேனன் அங்கு அழிவு ஆதல் கண்டு - அரிசேனன்
அப்போர்க்களத்தே மாண்டமை கண்டு, அயில் வாள் ஒளி மிளிரா - கூரிய வாள்
ஒளிபரப்பா நிற்பவும், விரிசீர் வட்டமிடு கேடகம் - விரிந்து சிறந்த வட்டவடிவத்தால்
அழகு மிக்க கிடுகு, சுழலா - சுழலா நிற்பவும், நகு வருவான் - மறநகை கொண்டு
வருகின்றவனாகிய குணசேனன் என்பான், அணிசேர் பரி - அணிகளாக வகுக்கப்பட்ட
புரவிகளையும், உயர்தேர் -உயரிய தேர்களையும், பல மதயானையும் - பலவாகிய மதம்
பொழிகின்ற யானைகளையும், எறியா - அழித்து, சாரிகை திரி - வட்டமாய்ச் சுழன்று, எவர்
- ஈண்டுள்ளாரின் யாரேதான், நிகராய்த் திறலார் - என்னோடு சமனாய்த் திறலுடையார்,
என வினவும் - என்று வினவினான், (எ - று.)

     அரிசேனன் இறந்தவுடன் குணசேனன் என்பான் வாளை வீசிக்கொண்டும்
கேடகத்தைச் சுழற்றிக்கொண்டும் தேர் யானை முதலியவற்றை அழித்துக்கொண்டும்
சாரிகைசுற்றி இக்களத்தே உள்ளாரில் யாரே எனக்கு நிகராய்ப்போர் புரிவாருளர் என்று
வினாயினன் என்க.
 

( 166 )

 

1297. சிகரிம்முடி 3திருமாமணி செறிகுண்டல மிலங்கத்
4திகிரிப்படை யரசன்றிறல் சிறக்கவெனப் புகழ்ந்து
பகருந்நல குணசேனனும் பருவம்முகி லிடிபோற்
புகரும்மத களிறென்னவும் 5புலியென்னவுந் திரிவான்.
 
     (இ - ள்.) சிகரிமுடி - மலைச்சிகரத்தை ஒத்த தன்முடியணியின்கண் அழுத்தப்பட்ட,
திருமாமணி - சூளாமணி வடமும், செறிகுண்டலம் - செவியிலே செறிக்கப்பட்ட
குண்டலங்களும், இலங்க - திகழ, திகிரிப்படை அரசன் திறல் சிறக்க - அச்சுவகண்ட
மன்னற்கு ஆற்றல் சிறந்திடுக, எனப் புகழ்ந்து - என்று வாழ்த்திப் புகழ்ந்து, பகரும்
நலகுண சேனனும் - புகழப்படுகின்ற நல்ல குணசேனன் என்னும் அம்மறவனும், பருவம்
முகில் இடிபோல் - பருவம் அமைந்த முகில் இடித்தாற் போன்று முழங்கி, புகர் -
முகப்பொறியுடைய, களிறு என்னவும் - ஆண்யானை போன்றும், புலி என்னவும் -
புலியைப் போன்றும், திரிவான் - அப்போர்க்களத்தே யாண்டும் திரிவானாயினன், (எ - று.)
 

     (பாடம்) 1 தேர் மிகுபல யானையும், தேர் மத பலயானை. 2நிகரானவருளரோ. 3திருமாறணி. 4திகிரிப்புடை. 5புலியும்மெத்.